'மணமகன் தேவை' விளம்பரம் கொடுத்து 10 பேரை ஏமாற்றி திருமணம் செய்த மோசடி ராணி !
திருவனந்தபுரம்: கேரளாவில் 10 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய மணபெண்ணை மணமேடையில் வைத்து போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரையைச் சேர்ந்தவர் ஷாலினி. 32 வயதான இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்ட ஷாலினி, கடந்த சில தினங்களுக்கு முன்பு, கணவனை இழந்த பெண்ணுக்கு மணமகன் தேவை என பத்திரிகைகளில் விளம்பரம் செய்திருந்தார்.
இந்த விளம்பரத்தை பார்த்த இளைஞர் ஒருவர், அதில் கொடுத்துள்ள செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். அப்போது தான் பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். விரைவில் கேரள உயர்நீதிமன்றத்தில் வேலை கிடைக்கும் எனவும் ஷாலினி கூறியுள்ளார்.
மேலும் தனக்கு இது 2வது திருமணம் எனவும் கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் நேரில் சந்தித்து திருமணம் செய்துள்ள முடிவு செய்தனர். அப்போது தனக்கு பெரிய அளவில் உறவினர்கள் யாரும் கிடையாது என்றும் திருமணத்தி்ற்கு ஒருசிலர் மட்டுமே வருவர் என்றும் ஷாலினி தெரிவித்துள்ளார். இதையடுத்து நேற்று காலை பந்தளம் அருகே ஒரு கோயிலில் திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
திருமண கூட்டத்தில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் ஷாலினியை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மணக்கோலத்தில் வருவது தனது நண்பர் ஒருவரின் மனைவி போல இருக்கிறதே? என்று சந்தேகம் அடைந்தார்.
உடனே நண்பரை தொடர்பு கொண்டு உடனே வரவழைத்துள்ளார். விரைந்து வந்து நண்பர் மணக்கோலத்தில் ஷாலினி இருப்பதை கண்டு அதிர்ச்சியின் உச்சத்துக்கு போனார். அதைத் தொடர்ந்து மணமகனின் பெற்றோர் மற்றும் உறவினர்களை அழைத்து பேசினார். தன்னை ஷாலினி திருமணம் செய்து ஏமாற்றியதை கூறினார். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து பந்தளம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். அதில் ஷாலினி திருமண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் பணத்திற்கு ஆசைப்பட்டு இதுவரை 10 பேரை திருமணம் செய்து ஏமாற்றியதாகவும் ஷாலினி போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஷாலினி மீது ஏற்கெனவே ஆரன்முளா, செங்கனூர் ஆகிய காவல் நிலையங்களில் திருமண மோசடி வழக்குகள் உள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. ஷாலினியிடம் மேலும் விசாரணை நடத்தினால் திடுக்கிடும் பல உண்மைகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.