காதலியுடன் தனித்திருந்த வீடியோ இணையத்தில் வெளியானதால் ஷாக்... கேரளாவில் இளைஞர் தற்கொலை
கேரளாவில் காதலர் தினத்தன்று எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டதால் வேதனையடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருவனந்தபுரம்: காதலர் தினத்தன்று காதலியுடன் இருந்த வீடியோவை ஒரு கும்பல் இணையதளத்தில் வெளியிட்டதால் அதிர்ச்சியடைந்த இளைஞர் வீட்டின் முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி தனது காதலியுடன் கொல்லம் கடற்கரையில் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார். அப்போது அங்கு பொது கழிப்பறைகள் இல்லாததால் அந்த பெண் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது அவர்களை வீடியோ எடுத்து மிரட்டிய ஒரு கும்பல் அந்தப் பெண்ணை தாக்கியுள்ளது. அவரை அந்த இளைஞர் காப்பாற்ற முயன்றபோது அவரையும் அந்த கும்பல் தாக்கி மிரட்டியுள்ளது.
விரக்தியடைந்த இளைஞர்
இதையடுத்து பாதிக்கப்பட்ட காதல்ஜோடி புகார் அளித்ததையடுத்து அந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு மன உளைச்சலுடன் அந்த இளைஞர் காணப்பட்டுள்ளார். தனது நண்பர்களிடமும் விரக்தியுடனே பேசி வந்துள்ளார்.
வைரலாக பரவிய இளைஞர்
இந்நிலையில் அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டு வைரலாக பரவி வருகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர் வீட்டின் முன்புறம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூக்கிட்டு தற்கொலை
அவர் தற்கொலைக்கான காரணத்தை கடிதமாக எழுதி வைத்துள்ளார். அதனை போலீசார் கைப்பற்றியுள்ளனர். வீடியோ வெளியானதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றங்களை பொறுத்துக்கொள்ள முடியாது
இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாநில போலீசாருக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் உத்தரவிட்டுள்ளார். இத்தகைய குற்றங்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் தொடரும் அதிர்ச்சி
அண்மையில் நடிகையை கடத்திய கும்பல் அவரை பாலியல் பலாத்காரம் செய்தது. இந்நிலையில் காதலியுடன் இருந்த இளைஞரை வீடியோ எடுத்து மர்ம நபர்கள் இணையதளத்தில் வெளியிட்டதால் 20 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.