அரசின் நலத் திட்ட உதவிகளை பெற ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது – சுப்ரீம் கோர்ட்
நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் எண் கட்டாயமல்ல என்று உச்சநீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி: மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று பொதுமக்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ளது.
ஆதார் எண் சாமானிய மக்களின் அடையாளம் என்று கூறும் மத்திய அரசு சமையல் எரிவாயு இணைப்பு முதல் டிரைவிங் லைசென்ஸ் வரை ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது என்ற இடைக்கால உத்தரவை மீறக்கூடாது என உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.
மதிய உணவு திட்டம்
நாடுமுழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக மதிய உணவு அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடி மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும், மத்திய அரசு ஆண்டு தோறும் பல கோடி ரூபாய்களை இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்கிறது. மதிய உணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவர்கள் தங்களது ஆதார் எண்ணை பள்ளியில் சமர்பிக்க வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.
ஸ்காலர்ஷிப்
மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதேபோல ஸ்காலர்ஷிப் பெறுவதற்கும் ஆதார் எண் அவசியம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பலரும் மனு தாக்கல் செய்தனர்.
உச்சநீதிமன்றம் கண்டிப்பு
அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது என்ற இடைக்கால உத்தரவை மீறக்கூடாது என உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.
இடைக்கால உத்தரவு
அரசின் நலத் திட்ட உதவிகளை பெற ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது என கடந்த 2015ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வரும் வரை அரசு திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.
மக்களின் விருப்பம்
இந்த உத்தரவை மாற்றியமைக்கக் கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இதை ஏற்று, வங்கிக் கணக்கு, ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், முதியோர் ஓய்வூதியத் திட்டம், வருங்கால வைப்பு நிதி, பிரதமரின் ஜன் தன் திட்டம் உள்ளிட்டவற்றிற்கு மக்களின் விருப்பத்தின் பேரில் ஆதார் எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
கட்டாயமாக்கக் கூடாது
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ஆதார் எண்ணை கட்டாயமாக்குவது தொடர்பான வழக்கு என்றைக்கு விசாரணைக்கு ஏற்கப்படும் என்ற தேதியை தெரிவிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இந்த வழக்கை விரைவில் விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மறுத்த நீதிபதிகள், அதுவரை அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது என்ற இடைக்கால உத்தரவை மீறக்கூடாது என்றும் தெரிவித்தனர்.