ஆதார் அட்டை வழக்கு.. 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ஆதார் அட்டை தொடர்பான வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : ஆதார் அட்டை தொடர்பான வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசின் சலுகைகளை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் என்று மத்திய அரசு அறிவித்தது. இது தனி நபர்களை பற்றி தகவல்களை அம்பலப்படுத்துவதாக உள்ளது என்றும், இது தனிமனித உரிமை மற்றும் சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் சமூக ஆர்வலர்களால் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மதிய உணவு திட்டம், அரசின் உதவித்தொகைகள் பெறும் திட்டம் என பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் அவசியம் என்ற உடன், குழந்தைகள் உரிமைகளுக்கான தேசிய ஆணையத்தின் முன்னாள் தலைவர் சாந்தா சின்கா உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அரசியல் சாசன அமர்வு
இது தொடர்பான வழக்கில் கடந்த 7-ந் தேதி நீதிபதி ஜே.செல்லமேஸ்வர் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆதார் எண் தொடர்பான அனைத்து மனுக்களையும் அரசியல் சாசன அமர்வு விசாரிப்பதுதான் சரியாக இருக்கும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
அமர்வுக்கு மாற்றம்
இதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆதார் அட்டை தொடர்பான வழக்குகளை 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.
9 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவு
இந்த அரசியல் சாசன அமர்வு இன்று ஆதார் தொடர்பான விசாரணையை தொடங்கியது. அப்போது, ஆதார் தொடர்பான வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் மத்திய அரசு கோரியது. அதனைத் தொடர்ந்து, 9 பேர் கொண்ட அமர்வுக்கு ஆதார் அட்டை வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
நாளை விசாரணை
ஒன்பது பேர் கொண்ட அமர்வு நாளை ஆதார் அட்டை தொடர்பான வழக்கை விசாரிக்க உள்ளது. அப்போது ஆதார் அட்டை தொடர்பாக பல முக்கிய உத்தரவுகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.