சமூக நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்கும் முடிவுக்கு தடை இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி!
சமூக நலத்திட்டங்களில் ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் முடிவுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
டெல்லி: மத்திய அரசின் சமூக நலத்திட்டங்களில் ஆதார் எண்ணை இணைக்கு கட்டாயமாக்கும் முடிவுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் ஆதார் கார்டு இல்லாதவர்களுக்கு அரசின் உதவியை மறுக்க கூடாது என்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ள்ளது..
பல்வேறு சமூக நலத்திட்டங்களின் பலன்களை அடைவதற்கு ஆதார் அடையாள எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளது. லிண்டர் மானியம், மண்ணெண்ணெய் மானியம், உரமானியம், மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள், காசநோயாளிகள், உள்பட பல சமூக நலத்திட்டங்களின் பயனை பெற ஆதார் எண் இணைப்பது அவசியம் என்பது மத்திய அரசின் உத்தரவு.
ஆனால் ஆதார், அரசியல் சாசனப்படி செல்லுபடியாகத்தக்கதா என்ற கேள்வியை எழுப்பி பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டு, அவை உச்சநீதிமன்றம் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், மத்திய அரசின் நிலைப்பாட்டில் இருந்து நிவாரணம் கேட்டும் பல்வேறு தரப்பினரும் வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர். பள்ளிகளில் மதிய உணவு திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது பற்றிய மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்ய பொது நல மனுவில் இன்று உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது. அதாவது சமூக நலத் திட்டங்களில் கட்டாயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு தடை விதிக்க முடியாது என கூறிவிட்டது உச்ச்சநீதிமன்றம்.
மேலும் ஆதார் அட்டையை பெறுவதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30 வரை நீட்டித்துள்ளதாகவும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கு மீதான விசாரணையை அடுத்த மாதம் 7ஆம் தேதிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.