வலுக்கும் போராட்டம்: மனைவியை மும்பையை விட்டு வெளியேறச் சொன்ன ஆமீர் கான்
மும்பை: சகிப்புத்தன்மை இன்மை பற்றி பேசி பிரச்சனையில் சிக்கிக் கொண்டுள்ள பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தனது மனைவி கிரண் ராவை சில நாட்களுக்கு மும்பையில் இருக்க வேண்டாம் என தெரிவித்துள்ளாராம்.
நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவது குறித்து பாலிவுட் நடிகர் ஆமீர் கான் கருத்து தெரிவித்து பிரச்சனையில் சிக்கியுள்ளார். இது குறித்து அவர் நிகழ்ச்சி ஒன்றில் கூறுகையில்,
நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவது குறித்து என் மனைவி கிரண் ராவ் அச்சம் தெரிவித்துள்ளார். நானும், கிரணும் எங்கள் வாழ்நாள் முழுக்க இந்தியாவில் இருந்துள்ளோம். இந்நிலையில் அவர் இந்தியாவை விட்டு வெளியேறிவிடலாமா என்று முதன்முறையாக என்னிடம் கேட்டார். அவர் கேட்டதை நினைத்து அதிர்ந்துவிட்டேன் என்றார்.
இந்நிலையில் ஆமீர் கானை கண்டித்து இந்து சேனா அமைப்பினர் அவரது வீட்டிற்கு வெளியே போராட்டம் நடத்தினர். மேலும் பாஜகவினர் ஆமீர் கானை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர் போராட்டங்களை அடுத்து ஆமீர் கானின் வீட்டுற்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த சூழலில் கிரண் ராவும், மகன் ஆசாதும் மும்பையில் இருப்பது பாதுகாப்பு அல்ல என்று ஆமீர் கருதுகிறாராம். இதையடுத்து அவர் மனைவியை 2, 3 நாட்களுக்கு மும்பையில் இருக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளாராம்.