சகிப்பின்மை சர்ச்சை: தாகூரின் கவிதையுடன் முற்றுப்புள்ளி வைத்த ஆமிர்கான்!
மும்பை: இந்தியா என் நாடு... இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன். நாட்டை விட்டு வெளியேறும் திட்டம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை, என்று நடிகர் ஆமிர்கான் கூறியுள்ளார்.
"என் மனைவி கிரணும், நானும் இத்தனை காலம் இந்தியாவில் வாழ்ந்து விட்டோம். முதல் முறையாக, இந்தியாவை விட்டு நாம் வெளியேறி விடலாமா என என் மனைவி கேட்டார். அவர், தன் குழந்தைகளுக்காக பயப்படுகிறார். எங்களைச் சுற்றியுள்ள சூழலைக்கண்டு அவர் பயப்படுகிறார். ஒவ்வொரு நாளும் செய்தித்தாளை பிரித்துப் பார்க்கவே அவர் அஞ்சுகிறார். நாட்டில் பாதுகாப்பற்ற உணர்வு பெருகி வருவதையே இது காட்டுகிறது," என்று நேற்று அவர் பேசியது நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆளும் பாஜக மற்றும் சங் பரிவார் குழுக்கள் ஆமீர்கானை கடுமையாகத் தாக்கின. திரையுலகிலும் அவருக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் இன்று ஒரு நீண்ட விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் இந்தியாவை தான் எந்த அளவு நேசிக்கிறேன் என்றும், தனக்கோ தன் மனைவிக்கோ நாட்டை விட்டு வெளியேறும் திட்டம் ஏதுமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தான் இந்தியன் என்பதில் பெருமைப்படுவதை யார் முன்பும் நிரூபிக்க வேண்டியதில்லை என்று கூறியுள்ள அவர், தனது அறிக்கையை மகாகவி ரவீந்திரநாத் தாகூரின் கவிதையுடன் முடித்திருந்துள்ளார்.
இந்தக் கவிதை அவரது மிகப் பிரபலமான கீதாஞ்சலி கவிதைத் தொகுப்பில் 35வதாக இடம்பெற்றுள்ளது. அந்த கவிதை..
Where the mind is without fear and the head is held high,
Where knowledge is free,
Where the world has not been broken up into fragments,
by narrow domestic walls,
Where words come out from the depth of truth,
Where tireless striving stretches its arms towards perfection,
Where the clear stream of reason has not lost its way,
Into the dreary desert sand of dead habit,
Where the mind is led forward by thee,
Into ever-widening thought and action,
Into that heaven of freedom, my father, let my country awake.
Jai Hind.
Aamir Khan.
தமிழாக்கம்...
எனது நாடு விழித்தெழட்டும்!
எங்கே மனம் அச்சமற்று இருக்கிறதோ,
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,
எங்கே அறிவு அடிமையற்று திகழ்கிறதோ,
எங்கே உலகம் குறுகிய சுவர்களால் பிளவுபடாமல் இருக்கிறதோ,
எங்கே வார்த்தைகள் உண்மையின் அடித்தளத்தினின்று வருகின்றனவோ,
எங்கே களைப்பற்ற உழைப்பு தனது கரங்களை முழுநிறைவை நோக்கி நீட்டுகின்றதோ,
எங்கே இறந்த பழக்கம் எனும் இருண்ட பாலைவன மணலில் நல்ல அறிவு எனும் தெளிந்த நீரோடை தடம் புரண்டு செல்லாமல் இருக்கிறதோ,
எங்கே அகன்ற எண்ணம், செயல்களை நோக்கி நீ எனது மனத்தை வழிநடத்திச் செல்கிறாயோ
எனது அன்புத் தந்தையே! எனது பாரதம் அந்த விடுதலையெனும் சொர்க்கத்தில் விழித்தெழட்டும்!