ஆம் ஆத்மியில் இருந்து பிரசாந்த் பூஷண், யோகேந்திரா அதிரடி நீக்கம்!!
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்து பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் கேஜ்ரிவாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனால் பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் கட்சியின் அரசியல் விவகார குழுவில் இருந்து நீக்கப்பட்டனர்.
அக்கட்சியில் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் தோல்வி அடைந்தன. இந்நிலையில் கேஜ்ரிவாலின் செல்போன் உரையாடல் கொண்ட டேப் வெளியாகி கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில் பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோரை கெஜ்ரிவால் கடுமையாக தாக்கி கூறியிருந்தார். அதில் 67 எம்.எல்.ஏ.க் களுடன் ஆம் ஆத்மியை விட்டு வெளியேறுவேன் என்றும் கேஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் ஆம்ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று காலை கூடியது. இக்கூட்டத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் பங்கேற்க வந்தபோது ஏராளமான தொண்டர்கள் கூடியிருந்து வரவேற்றனர்.
அதன் பிறகு அங்கு வந்த யோகேந்திர யாதவ் கூட்டம் நடந்த இடத்துக்குச் செல்லாமல் கட்சி அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் பிரசாந்த் பூஷணுடன் இணைந்து கூட்டத்தில் பங்கேற்றார்.
ஆம் ஆத்மி தொண்டர்களோ பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இதனிடையே யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகியோரை ஆம் ஆத்மியின் தேசிய செயற்குழுவில் இருந்து நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இருவருக்கும் ஆதரவாக 20 பேரும் எதிராக 200 பேரும் வாக்களித்தனர். இதனால் இருவரும் அக்கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டனர். இதனிடையே தங்களை நீக்கியது ஜனநாயகப் படுகொலை என்று பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவும் சாடியுள்ளனர்.