பின்லாந்திலிருந்து திரும்பி வர துணை முதல்வருக்கு பேக்ஸ்.. டெல்லி ஆளுநர் vs ஆம் ஆத்மி வார்த்தை போர்
டெல்லி: துணை நிலை ஆளுநர், மனிஷ் சிசோடியாவுக்கு பேக்ஸ் அனுப்பிய டெல்லி துணை நிலை ஆளுநருக்கும், அமைச்சர்களுக்கும் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது.
பின்லாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள டெல்லி துணை முதல்வர், மனிஷ் சிசோடியா உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் பேக்ஸ் அனுப்பிய நிலையில், ஆளுநர் அலுவலகம் சென்ற ஆம் ஆத்மி அமைச்சர்கள் சத்யேந்தர் ஜெயின் மற்றும் கபில் மிஸ்ரா ஆகியோர் ஆளுநர் அலுவலகத்தில் இல்லாத காரணத்தினால் சந்திக்க முடியாமல் திரும்பினர்.
இதையடுத்து ஆளுநரை விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர் ஆம் ஆத்மி அமைச்சர்கள். இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர்கள் சத்யேந்தர் ஜெயின் மற்றும் கபில் மிஸ்ரா, "மனிஷ் சிசோடியாவிற்கு அவசரமாக பேக்ஸ் அனுப்பியதால் நாங்கள் அவசர நிலை என கருதி சந்திக்க வந்தோம்.ஆனால், நஜீப் ஜங் அலுவலகத்தில் இல்லை. இன்று ஆளுநர் அலுவலகத்துக்கு விடுமுறை எனவும் எனவே அலுவலகத்தில் இருக்க மாட்டார் எனவும் கூறப்பட்டது.இதையடுத்து தொலைபேசியில் தொடர்பு கொண்டோம் அவர் வீட்டிலும் இல்லை. இன்று பணியாற்றும் மனநிலையில் ஆளுநர் இல்லை. டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களால் டெல்லி தடுமாறிக்கொண்டு இருக்கும் நிலையில், ஜங்கை சந்திக்க நேரம் கேட்டு காத்திருக்க வேண்டிய தேவையில்லை" என தெரிவித்தனர்.
உடனே, பதிலடி கொடுத்துள்ள ஆளுநர் அலுவலகம், வாரத்தின் அனைத்து நாட்களிலும் ஆளுநர் அலுவலம் வழக்கம் போல் இயங்கும். உரிய முன் அனுமதியை அவர்கள் பெறவில்லை என்று தெரிவித்துள்ளது.
டெல்லி மிக மோசமான பொதுசுகாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இதை வைத்து அரசியல் செய்வது வருந்ததக்கது என்றும், ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.