ரயில்வே பட்ஜெட் பாஜக தலைமையிலான அரசு தவறவிட்ட ஒரு வாய்ப்பு – ஆம் ஆத்மி அறிக்கை
டெல்லி: ரயில்வே பட்ஜெட்டில் தெளிவான அறிவிப்புகள், திட்டங்கள் இல்லாமல் பாரதிய ஜனதா அரசு வாய்ப்பை தவறவிட்டுவிட்டது என்று ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்த கருத்தினை வெளியிட்டுள்ளது ஆம் ஆத்மி கட்சி.
அவ்வறிக்கையில், "பாஜக தலைமையிலான அரசு வெளியிட்டுள்ள ரயில்வே பட்ஜெட் அவர்களுக்கு ஒரு தவறவிட்ட வாய்ப்பாகி விட்டது. நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்த ரயில்வே பட்ஜெட்டினை எதிர்கால வளர்ச்சிகளை எதிர்நோக்கி வடிவமைத்திருக்க வாய்ப்புகள் இருந்தும் அவை தவறவிடப்பட்டுள்ளன.
பல்லாயிரக்கணக்கான மக்களைப் பொறுத்த வரையில், கட்டண குறைவும், ரயில்வே துறையில் நிலவி வருகின்ற ஊழலும் அகற்றப்படவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பினை இந்த பட்ஜெட் பூர்த்தி செய்யவில்லை.
இந்திய அளவிலான ரயில்வே துறையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்கான எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இந்திய ரயில்வேயில் கிட்டத்தட்ட 2.5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. பாதுகாப்பிற்கு மட்டும் 1.6 லட்சம் இடங்கள் காலியாக உள்ள நிலையில் அதற்கான எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.
இந்த பட்ஜெட் ரயிலில் பயணிக்கும் நடுத்தர மக்களின் எதிர்ப்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாமல், குறைந்த அளவிலேயே பயணம் செய்கின்ற மேல்தட்டு மக்களுக்கு சாதகமாகத்தான் அமைந்துள்ளது. இது ஆரோக்கியமான போக்கல்ல.
ரயில்வேயில் பாதியில் நிற்கின்ற பல்வேறு கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களை அமைச்சர் ஒத்துக் கொண்ட போதிலும், அதனை எப்படி சரிசெய்வது என்பது குறித்தான திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை.
ஆம் ஆத்மியைப் பொறுத்த வரையில் அன்னிய முதலீடுகளுக்கு எதிர்ப்பில்லை. ஆனால், ரயில்வேயில் எந்த திட்டங்களில் அந்நிய முதலீடுகள் அனுமதிக்கப்படும் என்பது குறித்த தெளிவான அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.
ரயில்வே துறையில் என்னமாதிரியான மாறுதல்கள் தேவை என்பதை அரசு தெளிவாக அறிவிக்க வேண்டும். மேலும், ரயில்வே துறைகளில் மேம்பாடு இருந்தாலும் அவை அமைச்சகம், ரயில்வே நிர்வாகம் இடையே பிரச்சினையை தூண்டிவிட்டுவிடக்கூடாது.
மேலும், புதிய ரயில்களுக்கான அறிவிப்பினை இந்த பட்ஜெட் வெளியிடவில்லை என்பதும் ஒரு மிகப்பெரிய ஓட்டையாக அமைந்துவிட்டது. ஒரு சாரருக்கு சாதகமாக மட்டுமே முடிவெடுத்தது போன்றே அரசின் செயல்பாடுகள் உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.