சபரிமலையில் ஆராட்டுத்திருவிழா கோலாகலம்.. நாளை சங்குத்தியில் பள்ளிவேட்டை!
சபரிமலையில் ஆராட்டுத்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
சபரிமலை: சபரிமலையில் நடைபெற்று வரும் ஆராட்டு திருவிழாவில் நாளை சரங்குத்தியில் பள்ளிவேட்டை நடைபெறுகிறது. நாளை மறுநாள் பம்பையில் ஆராட்டு நடைபெறுகிறது.
சபரிமலையில் புதிய தங்க கொடிமர கும்பாபிஷேகம் கடந்த மாதம் 25-ம் தேதி நடைபெற்றது. அதன் பின்னர் ஆராட்டு திருவிழா 28-ம் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து தினமும் இரவு ஒன்பது மணிக்கு ஸ்ரீபூதபலியும், ஐந்தாம் திருவிழா முதல் யானை மீது சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் விழா முதல் தினமும் மதியம் 12 மணிக்கு உற்சவபலி நடைபெற்று வருகிறது.
ஒன்பதாம் நாள் விழாவான நாளை இரவு ஒன்பது மணிக்கு அத்தாழ பூஜைக்கு பின்னர் சுவாமி பள்ளி வேட்டைக்காக சரங்குத்திக்கு எழுந்தருளுவார். நள்ளிரவில் பள்ளி வேட்டை முடிந்த பின்னர் சன்னிதானம் திரும்பும் சுவாமி, கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் பள்ளி உறங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
7ஆம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் சுவாமியை ஸ்ரீகோயிலுக்குள் ஆவாகிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் நெய்பிஷேகம் நடைபெறும். காலை ஏழு மணிக்கு உஷபூஜைக்கு பின்னர் யானை மீது சுவாமி ஏற்றப்பட்டு, ஆராட்டு பவனி பம்பைக்கு புறப்படுகிறது.
பகல் 12.30 மணிக்கு பம்பையில் ஆராட்டு விழா நடைபெறுகிறது. மாலை மூன்று மணிக்கு ஆராட்டு பவனி சன்னிதானத்துக்கு புறப்படும். இரவு 10 மணிக்கு சன்னிதானம் வந்ததும் திருக்கொடி விழா நிறைவு பெறும். அத்துடன் நடை அடைக்கப்படும்.
அதன் பின்னர் ஆடி மாத பூஜைகளுக்காக 16-ம் தேதி மாலை ஐந்து மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்படுகிறது. 17-ம் தேதி காலை முதல் நெய்யபிஷேகம் நடைபெறும்.