சிறையில் டாக்டர், டீச்சர் வேலை பார்க்கும் ராஜேஷ், நுபுர் தல்வார்
காசியாபாத்: ஆருஷி தல்வார், ஹேம்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பல் மருத்துவர்களான ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வாருக்கு சிறையில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
டெல்லி நொய்டாவைச் சேர்ந்தவர்தள் பல் மருத்துவர்களான ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார். அவர்களின் ஒரே மகள் ஆருஷி(14) மற்றும் அவர்களின் வீட்டில் வேலை செய்த நேபாளத்தைச் சேர்ந்த ஹேம்ராஜ் ஆகியோர் கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் தல்வார்களின் வீட்டில் பிணமாகக் கிடந்தனர்.
இந்த வழக்கில் ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வாருக்கு காசியாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இதையடுத்து அவர்கள் இருவரும் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள தாஸ்னா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் தினமும் ரூ.40 சம்பளத்திற்கு வேலை செய்கிறார்கள். ராஜேஷ் சிறையில் உள்ள மருத்துவமனையில் வேலை பார்க்கிறார். நுபுர் சிறையில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கல்வி கற்றுத் தருகிறார்.
இந்நிலையில் காசியாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தல்வார்கள் மேல்முறையீடு செய்யவிருப்பதாக அவர்களின் வழக்கறிஞர் தெரிவித்தார்.