கவுகாத்தியிலிருந்து டெல்லி சென்றது அப்துல் கலாம் உடல்
ஷில்லாங்: மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் மாரடைப்பால் நேற்றிரவு காலமான முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் உடல் ராணுவ ஹெலிகாப்டரில் ஷில்லாங்கிலிருந்து, அசாம் மாநிலம் கவுகாத்தி கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி வந்து கொண்டிருக்கின்றது.
முன்னதாக ஷில்லாங்கில் அவரது உடலுக்கு ராணுவ வீரர்கள் வீரவணக்கம் செலுத்தினர். கவுகாத்தியிலும் தேசியக் கொடி போர்த்தப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு அசாம் முதல்வர் தருண் கோகாய் அஞ்சலி செலுத்தினார்.
ராணுவ மரியாதையுடன் அப்துல் கலாம் அவர்களது உடல் டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டு வரப்படுகின்றது. காலை 11 மணிக்குள் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. டெல்லியில் அவரது வீட்டிலேயே மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தெரிகின்றது.
இந்நிலையில், "அவரது உடலை ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்வதற்கு நாங்கள் விரும்புகிறோம். உறவினர்களும் பொதுமக்களும் அதனையே விரும்புகின்றனர். ஆகையால் அவரது உடலை ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எங்கள் குடும்பத்தின் சார்பாக, இந்த நேரத்தில் வேண்டுகோளாக விடுக்கிறோம்" என்று அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்லிக்கு வரும் உடலை பிரதமர் மோடி பெற்றுக் கொள்ள இருக்கின்றார். மேலும், அவரது இறுதிச் சடங்கு எங்கு நடைபெறும் என்பது பற்றியும் இன்று முடிவு செய்யப்பட உள்ளது.
தலைவர்கள் அஞ்சலி:
அப்துல் கலாம் அவர்களின் உடல் 10 மணியிலிருந்து 11 மணிக்குள் டெல்லி வந்து சேரும் என்றும், ராஜாஜிமார்க்கில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று மாலை 3 மணியளவில் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்துவார் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
சொந்த ஊர் பயணம்:
மேலும், நாளை காலை 10 மணியளவில் அவருடைய உடல் ராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட வாய்ப்புள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருவதாகவும், இதனால் கலாமின் உடல் அவரது சொந்த மண்ணிலேயே அடக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் உறுதியில்லா தகவல்கள் தெரிவித்து வருகின்றன.