பல மணி நேரம் அலைந்தும் முருகனை காப்பாற்ற முடியலையே.. வேதனையில் டிரைவர் ராஜு
விபத்தில் சிக்கி உயிருக்கு போரடிய இளைஞரோடு ஆம்புலன்ஸ்சிலேயே 7 மணிநேரம் மருத்துவமனைகளுக்கு அலைந்துள்ளார் டிரைவர் ராஜூ.
திருவனந்தபுரம்: ஞாயிறன்று விபத்தில் சிக்கிய தமிழர் முருகனை கேரளாவில் உள்ள மருத்துவமனைகள் சிகிச்சை தர மருத்து விட்டதால் 7 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு அவர் உயிரை விட்டுள்ளார்.
இதற்குக் காரணம் முருகன் ஏழை என்பதால் அவருக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மருத்து விட்டன. அதே நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் உயிர்காக்கும் உபகரணங்கள் இல்லை.
திருநெல்வேலியை சேர்ந்த முருகன் ஞாயிறன்று இரவு விபத்தில் சிக்கினார். அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் டிரைவர் ராஜூ என்பவர் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றார். முதலில் அவர் சென்றது கொல்லத்தில் உள்ள மெடிசிட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத்தான்.
ஏழை என்பதால் அலட்சியம்
அங்கு முருகனின் நிதிநிலைமைகளை ஓட்டுநர் ராஜூவிடம் விசாரித்த மருத்துவமனை நிர்வாகம் உயிர்காப்பு வெண்டிலேட்டர்கள் காலியாக இல்லை அனைத்தும் பயனில் உள்ளன என்று கூறிவிட்டனர்.
சிகிச்சை அளிக்க மறுப்பு
உடனே மெடிட்ரினா மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றோம் அங்கும் உயிர்காப்பு வசதிகள் இல்லை என்று கூறிவிட்டனர். உடனடியாக அங்கிருந்து 72கிமீ தூரத்தில் உள்ள திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பிரயோஜனமில்லை. வென்டிலேட்டர் இல்லை என்று கூறிவிட்டனர்.
ஆம்புலன்ஸ்சில் அலைந்தேன்
எஸ்.யு.டி மற்றும் திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனைகளுக்கு முருகனைக் கொண்டு சென்றோம், அங்கும் முருகனை அனுமதிக்கவில்லை. மீண்டும் கொல்லம், பூயாப்பல்லியில் உள்ள அஜீஜியா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முருகனை அழைத்து சென்றும் பயனில்லை, முருகனுக்கு சிகிச்சை தர மறுத்து விட்டனர்.
7 மணிநேர போராட்டம்
முருகனை கொல்லம் மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம், அங்கு வந்த போது முருகன் இறந்து விட்டதாக அறிவித்தனர். அதாவது ஞாயிறு இரவு 11 மணிக்கு விபத்து நடந்துள்ளது. திங்கள் காலை 6 மணிக்கு முருகன் இறந்துள்ளார். 7 மணி நேரம் சிகிச்சைக்காகப் போராடியும் எவ்விதப் பயனுமில்லாமல் போனது.
2 மணிநேரம் காத்திருப்பு
உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தேன், இதன் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவனந்தபுரம் மருத்துவமனையில் சுமார் இரண்டு மணிநேரங்கள் கழித்தே செயற்கை சுவாசம் வழங்கும் வசதியானது இல்லை என தெரிவிக்கப்பட்டது. காயம் அடைந்தவர் அங்கிருந்து பின்னர் திருப்பி அனுப்பட்டார். முன்பே சொல்லியிருந்தால் வேறு எங்காவது கொண்டு சென்றிருக்கலாம் என்றும் டிரைவர் ராஜூ கூறினார்.
ஏழை என்பதால் அலட்சியம்
மருத்துவமனைகளின் அலட்சியம் காரணமாக ராஜூஅளித்த புகாரினை அடுத்து கொல்லம் மாவட்ட காவல்துறையினர் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏழை என்பதால் சிகிச்சை தராமல் அலட்சியப்படுத்தியுள்ளனர். போன உயிர் திரும்ப வருமா? என்று கேட்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.