பாவனா கடத்தல் வழக்கு.. திலீப்பை தொடர்ந்து காவ்யா மாதவன் கைது? பரபரப்பில் மலையாள திரையுலகம்
திருவனந்தபுரம்: மலையாள நடிகை பாவனா கடத்தல் வழக்கில் முக்கிய திருப்பமாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக அவரது மனைவி காவ்யா மாதவன் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை பாவனா, கடந்த பிப்ரவரி 17ம் தேதி காரில் வந்துகொண்டிருந்தபோது ஒரு கும்பலால் கடத்தப்பட்டு, காரில் மானபங்கப்படுத்தப்பட்டார். இதுதொடர்பாக, பல்சர் சுனி என்பவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
திடீர் திருப்பமாக, பல்சர் சுனியின் கூட்டாளி, தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக நடிகர் திலீப், போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், திலீப்பிடமும், அவருடைய மேலாளர் அப்புண்ணி, சினிமா இயக்குனர் நாதிர் ஷா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
நடிகை பாவனா கடத்தல் வழக்கில் விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், திலீப் இன்று கைது செய்யப்பட்டார். திலீப்புக்கு சில மாதங்கள் முன்பு நடிகை காவ்யா மாதவனுடன் 2வது திருமணம் நடைபெற்றது.
பாவனாவை ஆபாசமாக படம் பிடித்த செல்போனில் இருந்த மெமரி கார்டை காவ்யா மாதவனின் நிறுவனத்தில் ஒப்படைத்ததாக போலீசில் பல்சன் சுனி தெரிவித்தார். இதன் அடிப்படையில் கொச்சி காக்கநாட்டில் உள்ள காவ்யா மாதவனுக்கு சொந்தமான ஆன்-லைன் ஆடை நிறுவனத்தில் கொச்சி போலீசார் சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
அடுத்தடுத்து ஆதாரங்கள் வெளியாகி வரும் நிலையில், புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள லோக்நாத் பெக்ரா பாவனா வழக்கு குறித்து விசாரித்து வரும் குற்றப்பிரிவு ஐஜி தினேந்திர கஷ்யப் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பாவனா கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக அவர்களை கைது செய்யும்படி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக நடிகர் திலீப் மற்றும் அவரது நண்பரும் இயக்குனருமான நாதிர்ஷாஆகியோரிடம் கடந்த சில நாட்களுக்கு முன் போலீசார் 13 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதில் நாதிர்ஷா அளித்த சில தகவல்களில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அவரை மீண்டும் போலீசார் விசாரிக்க தீர்மானித்துள்ளனர்.
நடிகர் திலீப் கைதான நிலையில், அவருடைய மேலாளர் அப்புண்ணி, இயக்குனர் நாதிர்ஷா ஆகியோரிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவ்யா மாதவன், அவருடைய தாயார் ஆகியோரும் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளனர்.
இந்நிலையில் காவ்யாமாதவனும் அவரது தாயாரும் திடீர் என்று மாயமானதாக கூறப்படுகிறது. எந்த நேரத்திலும் காவ்யா கைதாக வாய்ப்புள்ளதால் மலையாள திரையுலகில் பரபரப்பு நிலவி வருகிறது.