ஆண்களை தரக்குறைவாக பேசிய விவகாரம்... நடிகை ஊர்வசிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆண்களை தரக்குறைவாகப் பேசியது தொடர்பாக நடிகை ஊர்வசிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருவனந்தபுரம்: மலையாள தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆண்களை தரக்குறைவாகப் பேசியது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி நடிகை ஊர்வசிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை ஊர்வசி. இவர் மலையாள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஜீவிதம் சாட்சி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வோரிடம் அவர்களது குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை கேட்டு அதைத் தீ்ர்க்க ஆலோசனை வழங்குவது ஊர்வசி வழக்கம். இந்நிலையில், சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த ஒரு குடும்பத்தினரை அவர் மிகவும் அசிங்கமாக தரக்குறைவாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, இந்த விவகாரம் தொடர்பாக திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒருவர் மனித உரிமை ஆணையத்திற்கு மனு அனுப்பியுள்ளார்.
அதில் அவர், 'நான் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊர்வசி நடத்திய தனியார் டிவியின் நிகழ்ச்சியில் பங்கு கொண்டேன். அப்போது ஊர்வசி என்னை மிக மோசமான வார்த்தைகளால் திட்டினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஆண்களிடமும் அவர் மோசமாக நடந்து கொள்கிறார். இதனால் இது தொடர்பாக நடிகை ஊர்வசி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுவை மனித உரிமை ஆணைய தலைமை நீதிபதி மோகன்தாஸ் விசாரித்தார். அதை தொடர்ந்து நடிகை ஊர்வசி, தனியார் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், ஆலோசகர்கள் ஆகியோர் இது சம்பந்தமாக ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்க ஆணையம் நோட்டீஸ் அனுப்ப அவர் உத்தரவிட்டார்.
இந்த நிகழ்ச்சி படப்பிடிப்பின் போது ஊர்வசி குடித்து விட்டு வந்ததாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.