பாபர் மசூதி இடிப்பு: அத்வானி மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில், 2 வருடத்திற்குள் வழக்கை மீண்டும் முழுமையாக விசாரித்து முடிக்க வேண்டும் என்று லக்னோ மற்றும் ரேபரலி நீதிமன்றங்களுக்கு உத்தரவிடுகிறோம் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில், எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1992ம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ள, பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
விசாரணையில், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் ரேபரலி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். அலகாபாத் ஹைகோர்ட்டும் மேல்முறையீட்டின்போது, இந்தத் தீர்ப்பை உறுதி செய்தது. கூட்டு சதி வழக்கிலிருந்து அத்வானி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டிருக்க கூடாது, இந்த வழக்கை திரும்ப விசாரிக்க வேண்டும் என்று கூறி, இவர்களின் விடுதலையை எதிர்த்து சிபிஐ, சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது. இந்த முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
25 வருடமாக ஒரு வழக்கில் முடிவு வரவில்லை என்பது வழக்கு தொடர்ந்தவருக்கு இழைக்கப்படும் அநீதியாகும். எனவே 2 வருடத்திற்குள் இந்த வழக்கை மீண்டும் முழுமையாக விசாரித்து முடிக்க வேண்டும் என்று லக்னோ மற்றும் ரேபரலி நீதிமன்றங்களுக்கு உத்தரவிடுகிறோம் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம், வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள கல்யாண்சிங், தற்போது ஆளுநராக உள்ளதால், அரசியல் சாசன பாதுகாப்பு அவருக்கு உள்ளது. அவர் மீது தற்போது வழக்கு பதிவு செய்ய முடியாது. கல்யாண்சிங்கின் பதவி காலம் முடிவடைந்த பிறகு, விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
இதனிடையே உமா பாரதி மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும், கல்யாண் சிங் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரிக்கைவிடுத்துள்ளது.