கொல்கத்தாவில் கொளுத்தும் வெயில்... பகல் நேரங்களில் டாக்சிகள் ஓடாது என அறிவிப்பு
கொல்கட்டா: கொளுத்தும் கோடை வெயில் காரணமாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை கொல்கட்டாவில் டாக்சிகள் இயக்கம் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.
கொல்கட்டா நகரில் கோடை வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது. கடந்த வாரம் இரண்டு டாக்சி டிரைவர்கள் வெயிலின் கொடுமையால் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால், மற்ற டாக்சி டிரைவர்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை டாக்சிகளை இயக்கப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பெங்கால் டாக்சி யூனியன் தலைவர் பீமல் கூறுகையில், ‘கொல்கட்டாவில் எவ்வளவு வெயில் அடிக்கிறது என மக்களுக்கே தெரியும். இங்குள்ள பெரும்பாலான டாக்சிகளில் ஏர்கண்டிஷன் வசதியும் இல்லை. அதோடு டாக்சி டிரிஅவர்கள் ஓய்வெடுக்க, அமர்ந்து சாப்பிட என டாக்சி ஸ்டாண்டுகளும் முறையாக இல்லை. இதனால் டாக்சி டிரைவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகிறார்கள். இதனால், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை டாக்சிக்களை இயக்குவதில்லை என முடிவு செய்துள்ளோம்' எனத் தெரிவித்துள்ளார்.
வெயிலின் கொடுமையில் சொந்த வாகனங்களை எடுத்துச் செல்ல முடியாத மக்களே டாக்சிகளில் பயணம் செய்கிறார்கள் என்ற போதும், நாங்களும் மனிதர்கள், எங்களது உயிருக்கும் வெயிலால் ஆபத்து தான் என்கிறார்கள் டாக்சி டிரைவர்கள்.
பெரும்பாலான டாக்சி டிரைவர்கள் இந்த அறிவிப்பின் படி செயல்பட்டாலும், சிலர் வழக்கம் போல் டாக்சிகளை இயக்கி வருகின்றனர்.