உடைகிறது ஆம் ஆத்மி? சமாதான முயற்சிகள் தோல்வி- நாளை செயற்குழு கூட்டத்தில் கிளைமாக்ஸ்?
டெல்லி: ஆம் ஆத்மியில் உட்கட்சி பூசல் உச்சகட்டமைந்துள்ள இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து கேஜ்ரிவால் விலக வேண்டும் என்பதில் பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் உறுதியாக உள்ளனர். இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியும் தோல்வியில் முடிந்த பரபரப்பான சூழலில் ஆம் ஆத்மியின் தேசிய செயற்குழுக் கூட்டம் நாளை கூடுகிறது.
டெல்லி சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்றது ஆம் ஆத்மி. கேஜ்ரிவால் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றது முதல் உள்கட்சி பூசல் தலைதூக்கியது.
அக்கட்சியின் மூத்த தலைவர்களான பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் கேஜ்ரிவாலுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தனர். கட்சியின் கொள்கைகளை மீறி கேஜ்ரிவால் சர்வாதிகாரமாக செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டினர். தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில் பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் கட்சியின் அரசியல் விவகார குழுவில் இருந்து நீக்கப்பட்டனர். யோகேந்திராவிடம் இருந்து செய்தி தொடர்பாளர் பதவியும் பறிக்கப்பட்டது. அப்போது, கட்சிக்குள் நடக்கும் மோதல் தமக்கு மனவருத்தத்தை அளிப்பதாக கேஜ்ரிவால் தெரிவித்தார்.
உட்கட்சி பிரச்னையை சரிசெய்யும் வகையில் சிறப்பு குழு ஒன்றை கெஜ்ரிவால் அமைத்தார். ஆனாலும் கட்சி தலைவர்களுக்குள் ஏற்பட்டு வரும் மோதல் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டேதான் வருகிறது.
இந்நிலையில் உட்கட்சி பிரச்னைக்கு முடிவுகட்ட கட்சி தலைமை திட்டமிட்டது. பிரசாந்த், யோகேந்திராவிடம் சமாதான பேச்சுவார்த்தையில் கட்சி தலைமை ஈடுபட்டு வருகிறது. இருவரிடமும் நேற்று சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனாலும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவரும், துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா கூறுகையில், பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோரிடம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. கேஜ்ரிவாலை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக உள்ளனர் என்றார்.
ஆம் ஆத்மியில் நிலவிவரும் உட்கட்சி பூசல் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. உட்கட்சி பிரச்னையால் மக்கள் நலப்பணிகளில் அக்கட்சி கவனம் செலுத்த முடியாமல் உள்ளது. எனவே, இந்த விவகாரத்துக்கு முடிவு கட்டும் நிலையில் கட்சித்தலைமை ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து கேஜ்ரிவால் விலகுவாரா அல்லது பூஷண், யாதவ் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்களா என்பது நாளைய தேசிய கவுன்சில் கூட்டத்தில் தெரிய வந்துவிடும். நாளைய தேசிய செயற்குழுக் கூட்டத்தில் ஆம் ஆத்மியின் 400 உறுப்பினர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் பூஷண், நாங்கள் கட்சி மறுசீரமைப்புக்காக 5 அம்ச திட்டத்தை முன்வைத்துள்ளோம். நாளை கூட்டத்தில் அது நிராகரிக்கப்பட்டால் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவோம் என்றார்.
நாளை கிளைமாக்ஸ்?