கைது அச்சம்.. நிர்பயா ஆவணப்பட இயக்குநர் இந்தியாவை விட்டு தப்பி ஓட்டம்?
டெல்லி: சர்ச்சைக்குரிய நிர்பயா ஆவணப்படத்தை தயாரித்த இயக்குநர் வெஸ்லீ உட்வின் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.
2012ஆம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி டெல்லியில் மருத்துவ மாணவி ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். படுகொலையான பெண் 'நிர்பயா' என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறார்.
சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8-ந் தேதியன்று நிர்பயா தொடர்பான ஆவணப்படத்தை வெளியிட பி.பி.சி. தொலைக்காட்சி திட்டமிட்டது. இதற்காக அதன் இயக்குநர் வெஸ்லீ உட்வின் இந்தியாவுக்கு வந்திருந்தார்.
அவர் டெல்லி திஹார் சிறையில் உள்ள நிர்பயா கொலை வழக்கின் முதன்மை குற்றவாளி முகேஷ்சிங்கையும் பேட்டி எடுத்தார். அந்த பேட்டியில், நாங்கள் பலாத்காரம் செய்த போது அப்பெண் அமைதியாக இருந்திருந்தால் கொலை செய்திருக்க மாட்டோம்.. பலாத்கார சம்பவத்துக்கும் அப்பெண்ணே பொறுப்பு என்று திமிர்த்தனமாக பேட்டியளித்திருந்தான்.
இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இதனைத் தொடர்ந்து இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் திடீரென நேற்றே பி.பி.சி. நிர்பயா ஆவணப்படத்தை ஒளிபரப்பியது. இதனைத் தொடர்ந்து தம் மீது கைது நடவடிக்கை பாயலாம் என்று கருதிய இயக்குநர் வெஸ்லீ உட்வின் இந்தியாவை விட்டு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.