டெல்லி முடிஞ்சது.. இனி ஆபரேசன் பஞ்சாப்! ஆம் ஆத்மி அதிரடி திட்டம்
சண்டிகர்: டெல்லியில் ஆட்சியை மீண்டும் பிடித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் அடுத்த இலக்கு பஞ்சாப் மாநிலம் என்று கூறப்படுகிறது.
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களில் வெற்றி பெற்று, சாதனை படைத்தது. பாஜக 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ் கட்சியோ ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போய் விட்டது.
முதல்வராக கெஜ்ரிவால் 14ம் தேதி பதவி ஏற்கிறார். இதனிடையே, டெல்லியில் ஆட்சியை மீண்டும் பிடித்துள்ள ஆம் ஆத்மிக்கு புது உற்சாகம் பிறந்துள்ளது. அடுத்தடுத்து அண்டை மாநிலங்களில் தங்களது கட்சியின் ஆதிக்கத்தை விரிவுபடுத்த அக்கட்சி விரும்புகிறது.
மக்களவை தேர்தலில் கலக்கல்
எனவே, ஆம் ஆத்மியின் அடுத்த குறி பஞ்சாப் மீது விழுந்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் மாநிலத்தில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த கட்சிக்கு அதுதான் குறிப்பிடத்தகுந்த வெற்றியாக இருந்தது. ஆனால் இப்போது வெற்றி பெற்ற டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தோல்வியையே கண்டது.
வெற்றி நிச்சயம்
தோற்ற டெல்லியிலேயே அபார வெற்றி பெற முடிந்துள்ளது என்றால், வெற்றி பெற்ற பஞ்சாப்பில் ஏன் முடியாது என்ற யோசனையில் ஆம் ஆத்மி உள்ளது.
அடுத்த இலக்கு
ஆம் ஆத்மி கட்சியின் ராஜோவுரி கார்டன் தொகுதி எம்.எல்.ஏ. ஜர்னைல் சிங் இதுகுறித்து கூறியதாவது: எங்களுடைய அடுத்த இலக்கு பஞ்சாப்தான். நாங்கள் ஏற்கனவே டெல்லியில் அகாலிதளத்தினரை தோற்கடித்துவிட்டோம். டெல்லியில் ராஜோவுரி கார்டன் தொகுதியில் மட்டும் சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். தொகுதியில் என்னை தோற்கடிக்க பஞ்சாப்பின் துணை முதல்வர், சுக்பீர் சிங் பாதல் உள்பட முழு அமைச்சரவையும் பிரசாரம் செய்தது. ஆனால் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எதிர்ப்பு அலையை சாதகமாக்குமா?
பஞ்சாப்பில், சிரோன்மணி அகாலிதளம் - பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு 2017ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பு அலை இருக்கும் என்பதால் அதை சாதகமாக்கிக் கொண்டு தேர்தலில் வெற்றி பெற ஆம் ஆத்மி வியூகம் வகுக்க ஆரம்பித்துள்ளது.