சாமியாரின் ஆணுறுப்பை வெட்டியது யார்?... விசாரிக்க முடியாமல் போலீஸ் திணறல்!
சாமியார் ஹரியின் ஆணுறுப்பை வெட்டியது யார் என்ற விசாரணையில் குழம்பிப் போன போலீசார் வழக்கு விசாரணையை குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்ற பரிந்தரைத்துள்ளனர்.
திருவனந்தபுரம் : சாமியார் ஹரியின் ஆணுறுப்பை வெட்டிய வழக்கில் புதுப்புது கதைகள் கிளம்புவதால் இந்த வழக்கை குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கொல்லத்தில் ஆசிரமம் வைத்து நடத்தி வரும் ஹரி என்பவர் தன்னைத் தானே சாமியார் என்று சொல்லி வந்துள்ளார். இவர் இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதனால் அந்தப் பெண் அவரது ஆணுறுப்பை வெட்டி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
மே 28ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தால் சாமியார் ஹரி திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சாமியார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால் ஆணுறுப்பை வெட்டியதாக 23 வயது இளம்பெண் போலீசாரிடம் தெரிவித்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.
ஆனால் திடீர் திருப்பமாக அந்தப் பெண் தனக்கு எந்த பாலியல் தொந்தரவும் தரவில்லை என்றும் சாமியாரின் ஆணுறுப்பை வெட்டியது தனது நண்பர்கள் என்றும் கூறியிருந்தார். மேலும் போலீசார் தேவையின்றி திரித்து கூறிவிட்டதாக தெரிவித்திருந்தார்.
இதனால், உண்மை நிலை என்ன என்று தெரியாமல் போலீசார் திணறினர். மேலும் போலீசாரின் விசாரணையில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையை குற்றப்பிரிவிற்கு மாற்றுமாறு ஐஜி மனோஜ்அப்ரஹம், காவல்துறை தலைவர் சென்குமாருக்கு பரிந்தரை அளித்துள்ளதாக தெரிகிறது.