மத்திய அரசின் அடுத்த குறி பில்கேட்ஸ்-மெலிண்டா பவுண்டேஷன்?
டெல்லி: கிரீன்பீஸ் மற்றும் போர்டு பவுண்டேஷன் மீது நடவடிக்கை எடுத்துள்ள மத்திய அரசு அடுத்து பில் மற்றும் மெலின்டா பவுண்டேஷன் மீது குறி வைத்துள்ளதாக தெரிகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் நிறுவிய இந்த பவுண்டேஷன் மீது மத்திய உள்துறை அமைச்சகம் கண்காணிப்பை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 10 வருடமாக செயல்பாட்டில் உள்ளது பில் - மெலின்டா பவுண்டேஷன்.
நன்கொடை விசாரணை:
இந்த நிலையில் இந்த அறக்கட்டளைக்கு அளித்த ஒரு நன்கொடை குறித்து விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இந்தியாவைச் சேர்ந்த பொது சுகாதாரக் கழகம் என்ற அமைப்புக்கு அளித்த நன்கொடை குறித்த விசாரணை இது.
நிதியில் முறைகேடு:
இதுகுறித்து அகமதாபாத் மிர்ரர் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், பொது சுகாதாரக் கழகத்திற்கு கேட்ஸ் பவுண்டேஷன் நிதியுதவி செய்ததில் முறைகேடு இருப்பதாக தெரிகிறது என்று வெளியான செய்தியைத் தொடர்ந்து விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஆராய உத்தரவு அவ்வளவே:
இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், இது வழக்கமான விசாரணை அல்ல. கிடைத்த தகவலின் அடிப்படையில் அது என்று ஆராய உத்தரவிடப்பட்டுள்ளது அவ்வளவுதான் என்றார்.
அடுத்தது கேட்ஸ்:
அதேசமயம், சமீபத்தில் கிரீன்பீஸ் மற்றும் போர்டு பவுண்டேஷன் மீது மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளுடன் ஒப்பிடுகையில் அடுத்த குறி கேட்ஸ் பவுண்டேஷனாக இருக்குமோ என்ற கேள்வி எழாமல் இல்லை.
இதுவரை கேட்ஸ் பவுண்டேஷனுக்கு விசாரணை தொடர்பாக உள்துறை அமைச்சகத்திடமிருந்து எந்த சம்மனும் வரவில்லை என்று கூறப்படுகிறது.
கடுமையான அதிருப்தி:
சமீப காலமாக என்ஜிஓக்கள் மீது இறுக்கமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு. சமீபத்தில் கிரீன் பீஸ் இந்தியா நிறுவனத்தின் சர்வதேச மற்றும் உள்ளூர்க் கணக்குகளை முடக்க வைத்தது உள்துறை அமைச்சகம். இதனால் அந்த அமைப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
மத்திய அரசு தடை:
அதேபோல போர்டு பவுண்டேஷன் நிறுவனமானது, குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு நிதியுதவி அளிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் சட்டவிரோதமாக லாபம் சம்பாதிக்கும் பல நிறுவனங்களுக்கு உதவுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அந்த அமைப்புக்கு அதிரடியாக தடை விதித்தது மத்திய அரசு. இந்த நிலையில்தான் பில் கேட்ஸ் பவுண்டேஷன் மீது மத்திய அரசின் கவனம் திரும்பியுள்ளது.
பத்மவிபூஷன் விருது:
உண்மையில் இந்த கேட்ஸ் அறக்கட்டளைக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய அரசு பத்மபூஷன் விருது அளித்துக் கெளரவித்தது நினைவிருக்கலாம். மேலும் பில் கேட்ஸ் மற்றும் மெலின்டா கேட்ஸ்யைும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். மேலும் அவர்களுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடிக்கு புகழாரம்:
மேலும் பில் கேட்ஸும் கூட பிரதமர் மோடியை வெகுவாகப் புகழ்ந்து பேசியிருந்தார். தனது பிளாக்கிலும் மோடியை வெகுவாக புகழ்ந்து புகழாரம் சூட்டியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.