அமெரிக்க-இந்திய உறவால் கோபமடைந்த சீனாவை கூல் செய்ய புறப்பட்ட சுஷ்மா சுவராஜ்!
டெல்லி: இந்திய-அமெரிக்க நெருக்கமானதால் சூடான சீனாவை அமைதிப்படுத்தும் வகையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அந்த நாட்டில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
இந்தியாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சில முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதை சீனா அவ்வளவாக ரசிக்கவில்லை. நேரடியாக இதைக் கூறாமல், தேசிய பத்திரிகைகள் மூலமாக, அமெரிக்காவை நம்ப வேண்டாம் என்று சீனா எச்சரிக்கை செய்தது.
இந்நிலையில், பாகிஸ்தான், சீனாவுடன் தனது நட்பை பலப்படுத்திக்கொள்ள முயற்சிகளை தொடங்கியது. ரஷ்யாவும், சீனாவுடன் நெருக்கம் காட்டியது. தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவை தவிர்த்து மற்ற மூன்று முக்கிய நாடுகளும் கைகோர்ப்பதை கவனித்த இந்தியா, சீனாவை அமைதிப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சீனாவில் தற்போது மேற்கொண்டுவரும் சுற்றுப்பயணம், அதை நோக்கிய அடியெடுப்பாகவே பார்க்கப்படுகிறது.
பீய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சுஷ்மா கூறியதாவது:
இந்திய சீன உறவு மேம்பட 6 அம்ச திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். செயல்பாடுடன் கூடிய அணுகுமுறை, வௌிப்படையான பேச்சுவார்த்தை,. பொதுத்தன்மை, மண்டல ரீதியான வளர்ச்சி திட்டங்களில் உடன்பாடு, தகவல் தொடர்பு விரிவாக்கம். ஏசியான் நாடுகளின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத வேண்டும்.
இந்தியா இதற்கான முன்னேற்பாடுகளில் ஏற்கனவே இறங்கி விட்டது. இந்தியாவும் சீனாவும் வலுவான நாடுகள் இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு சுஷ்மா கூறினார்.