சிறைக்குப் போகும் 2வது பெரிய பாலிவுட் நடிகர் சல்மான்...!
மும்பை: சஞ்சய் தத்தைத் தொடர்ந்து சிறைக்குப் போகும் பாலிவுட் நடிகர்கள் வரிசையில் இணைந்துள்ளார் சலமான் கான்.
இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக வலம் வந்த சல்மான் கான் சிறைக்குப் போவது அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பாலிவுட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஏற்கனவே நடிகர் சஞ்சய் தத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது பெரிய நடிகராக சல்மான் கான் இந்த வரிசையில் சேர்ந்துள்ளார்.
கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதில் பலர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் தொடர்புடையவராக நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். அவர் மீது சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அபு சலேம் மற்றும் ரியாஸ் சித்திக் ஆகியோரிடமிருந்து இந்த ஆயுதங்களை அவர் பெற்றதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இந்த வழக்கி் 1993ம் ஆண்டு கைது செய்ய்பட்டார் சஞ்சய் தத். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் மீண்டும் 1995ம் ஆம்டு டிசம்பரில் கைது செய்யப்பட்டு 1997ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜாமீனில் விடுதலையானார்.
பின்னர் மீண்டும் 2006ம் ஆண்டு அவர் கைது செய்ய்பட்டார். மொத்தமாக 3 முறை கைது செய்யப்பட்டபோது அவர் ஆர்தர் சாலை சிறை மற்றும் புனே சிறையில் 7 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார்.
இந்த வழக்கில் 2007ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி மும்பை தடா கோர்ட் சஞ்சய் தத்துக்கு 6 வருட சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து மீண்டும் கைதானார் சஞ்சய் தத். இதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் 2013ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தத் தண்டனையை உறுதி செய்தது.
தற்போது சஞ்சய் தத் சிறையில் இருந்து வரும் நிலையில் இன்னொரு முக்கிய பாலிவுட் நடிகர் சிறைக்குப் போவது பாலிவுட்டை அதிர வைத்துள்ளது. சல்மான் கானின் ரசிகர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.