சர்ஜிக்கல் தாக்குதலுக்குப் பிறகு 20 முறை அத்துமீறிய பாகிஸ்தான்: 24 வீரர்கள் பலியான சோகம்!
ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 20 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 24 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஸ்ரீநகர் : சர்ஜிக்கல் தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுவரை 20 முறை தாக்குதல் நடத்தியுள்ள அந்நாட்டு ராணுவம் 24 வீரர்களை சுட்டுக்கொன்றுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் உள்ள ராணுவ படைபிரிவுத் தலைமையகத்தில் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி புகுந்த ஜெய்ஷ் ஏ முகமது அமைப்பைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் 18 பேர் கொல்லப்பட்டனர். 4 தீவிரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி அதிகாலையில் காஷ்மீர் எல்லையை கடந்து பாகிஸ்தானில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை சென்ற இந்திய ராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 7 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 2 பாகிஸ்தான் ராணுவத்தினர் மற்றும 38 தீவிரவாதிகள் இந்த அதிரடித் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இநத் தாக்குதல் பாகிஸ்தானுக்கு ஒரு எச்சரிக்கை என்று மத்திய அரசு தெரிவித்தது.
20 முறை தாக்குதல் நடத்திய பாக்
சர்ஜிக்கல் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் இதுவரை 20 முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இந்திய வீரர்கள் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நவம்பர் மாதத்தில் மட்டும் 8 முறை தாக்குதல்
எல்லைப் பகுதியில் உள்ள பாதுகாப்பு முகாம்கள் மீது அத்துமீறி நுழையும் பாகிஸ்தான் ராணுவத்தினர், வீரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர. இந்த மாதத்தில் மட்டும் 10க்கும மேற்பட்ட வீரர்களை சுட்டுக்கொன்றுள்ளனர்.
7 வீரர்கள் வீரமரணம்
நேற்று நக்ரோட்ட பகுதியில் போலீஸ் உடையில் ஊடுருவிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் உயிர் தியாகம் செய்தனர். அதேநேரத்தில் சம்பா பகுதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்
பாக் ஆதரவுடன் தீவிரவாதிகள் தாக்குதல்
பாகிஸ்தான் ராணுவம் மட்டுமின்றி அந்நாட்டு தீவிரவாதிகளும் காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தியுள்ளனர். தீவிரவாதிகள் ஊடுருவலுக்கு பாகிஸ்தான் ராணுவமும் உதவியாக உள்ளது.
வீரரின் தலை துண்டிப்பு
கடந்த 22ஆம் தேதி மச்சில் பகுதியில் நுழைந்த பாகிஸ்தான் படையினர் 3 பேரை சுட்டுக் கொன்றனர். அவர்களில் பிரபு சிங் என்பவரின் தலையை பாகிஸ்தான் ராணுவத்தினர் துண்டித்துச்சென்றுள்ளனர்.
ஹிஸ்புல் முஜாஹிதீன் தாக்குதல்
நவம்பர் 7ஆம் தேதி ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகள் சோபோர் பகுதியில் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். நவர்ம்பர் 6ஆம் தேதி காதி பகுதியில் நுழைந்த தீவிரவாதிகள் ராணுவ வீரர் ஒருவரை சுட்டுகொன்றனர்.
பொதுமக்களும் பலியான சோகம்
ஜம்மு-காஷ்மீரின் ஆர்னியா, ரஜவுரி ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் படையினர் நடத்திய மோட்டார் குண்டு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் 14 முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது.
அக்டோபரில் 11 முறை தாக்குதல்
அக்டோபர் மாதம் 11 முறை பாகிஸ்தான் தரப்பில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 5 முறை தீவிரவாதிகள் இந்திய பாதுகாப்பு முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணுவ வீரரின் உடல் சிதைப்பு
அக்டோபர் 29ஆம் தேதி பாதுகாப்பு படை முகாமில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் படையினர் இந்திய வீரரின் உடலை துண்டு துண்டாக சிதைத்தனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் படையின் 4 முகாம்களை இந்திய ராணுவம் குண்டு வீசி அழித்தது.