அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கு: கர்நாடகாவில் பதுங்கியிருந்த முக்கிய தீவிரவாதி நசீர் கைது!
பெங்களூர்: குஜராத்தின் அகமதாபாத் நகரில் 2008-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதி நசீர் கர்நாடகா மாநிலத்தில் சிக்கியுள்ளார்.
2008-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி அகமதாபாத் நகரில் 70 நிமிட இடைவெளியில் 21 இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 56 அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
நாட்டை உலுக்கிய இந்த கொடூர குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் இக்குண்டுவெடிப்பில் தொடர்புடைய இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி ஆலம்ஜேப் அப்ரிதி கைது செய்யப்பட்டார். பெங்களூரு சர்ச் தெரு குண்டுவெடிப்பில் கடந்த ஜனவரி மாதம் அப்ரிதி, தேசிய புலனாய்வு ஏஜென்சியால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
தற்போது கர்நாடகாவின் பெலகாவியில் பதுங்கியிருந்த நசீர் என்ற தீவிரவாதியும் சிக்கியிருக்கிறார். 2008-ம் ஆண்டு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது முதல் கடந்த 8 ஆண்டுகாலமாக இந்த தீவிரவாதி தலைமறைவாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.