நிரந்தரப்பொதுச்செயலாளர் ஜெ.தான்... இரட்டை இலையை மீட்போம் - நம்பிக்கையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள்
அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என்றும் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம் என டெல்லியில் ஒபிஎஸ்,ஈபிஎஸ் அணியினர் கூட்டாக கூறியுள்ளனர்.
டெல்லி: அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான், வழிகாட்டுக்குழு தான் இனி கட்சியை வழிநடத்தும் என்கிற பொதுக்குழு தீர்மானத்தை அளித்தோம் என தேர்தல் ஆணையத்தின் அழைப்பின் பேரில் டெல்லி வந்துள்ள கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
அதிமுக அணிகள் எடப்பாடி தலைமையிலான அணி, தினகரன் ஆதரவு அணி என இரண்டு அணிகளாகப் பிரிந்துள்ள சூழ்நிலையில் அண்மையில் அதிமுக அணியினர் பொதுகுழு கூட்டத்தை நடத்தினர். இதை எதிர்த்து தினகரன் அணியினர் வழக்கு தொடர்ந்ததை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பொதுக்குழுவை கூட்டிய அதிமுக அணியினர் சசிகலா, தினகரன் நியமனம் செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றினர், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டுமே என்றும் இனி பொதுச்செயலாளர் பதவி இல்லை வழிகாட்டுக்குழு தலைவர், இணை தலைவர் பதவி பொதுச்செயலாளர் அதிகாரத்தை பெற்றிருக்கும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினர்.
பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகல்களை தேர்தல் ஆணையத்திடம் அளிப்பதற்காக அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம், உதயகுமார், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி., மனோஜ் பாண்டியன் ஆகியோர், டெல்லி சென்று தேர்தல் ஆணைய அதிகாரிகளை இன்று காலையில் சந்தித்து ஆவணங்களை அளித்தனர்.
டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் தேர்தல் ஆணையத்தை சந்தித்தது பற்றி விளக்கம் அளித்தனர்.
சிவி சண்முகம் செய்தியாளர்களிடம் பேசும் போது, அதிமுக அணி சார்பில் பொதுக்குழ்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கொடுக்க வந்துள்ளோம். தினகரன், சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்தது அவர்கள் எதிர் மனுதாரர்கள் என்ற அடிப்படையில்தான் இதை வைத்து அவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று ஏற்றுக்கொள்ள முடியாது. கட்டாயம் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவோம் இது உறுதி என்றார்.
செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, "அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அளிக்க வந்துள்ளோம். அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதாவை நிரந்தரப்பொதுச்செயலாளர் என்று அழைப்போம் என்றார்.
அந்த அடிப்படையில் பொதுக்குழுவில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது, அதற்கு பதில் வழிகாட்டுக்குழு தலைவர், இணை தலைவர் கட்சியை வழிநடத்துவார்கள் என்றும் பொதுச்செயலாளரின் முழு அதிகாரமும் அவர்களுக்கு அளிக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானத்தின் நகல்களை இன்று தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ளோம். தேவைப்பட்டால் பொதுக்குழ் தீர்மானத்தை பிரமாண பத்திரமாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்வோம் என்றும் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.