ஏர் இந்தியா: பணியின் போது அவமானப்படுத்தியதாக விமானி மீது பணிப்பெண் போலீசில் புகார்
கொச்சி: கேரளாவில் பணி செய்யும் இடத்தில் அவமானப் படுத்தியதாக விமானி மீது பணிப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கேரள மாநிலம் நெடுமஞ்சேரி போலீசில் விமானப் பணிப்பெண் ஒருவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மூத்த விமானி, தன்னை பணி புரியும் இடத்தில் அவமானப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், விமானப்பணிப்பெண்ணிடம் மூத்த விமானி முறைகேடாக நடந்து கொள்ளவில்லை என்றும் சம்பவத்தின்போது விமான நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் பலர் அங்கு இருந்ததாகவும் விமான நிறுவன வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், விமானி மீது போலீசில் புகார் அளித்துள்ள அப்பணிப்பெண், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடம் எந்தப் புகாரும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புகார் அளித்த விமானப் பணிப்பெண் மும்பையைச் சேர்ந்தவர். சில நாட்கள் விடுப்பில் சென்ற அவர், நீண்ட நாட்கள் பணிக்கு வராமல் இருப்பதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.