முன்னாள் ஏர் ஹோஸ்டஸ் கொலை: இன்போசிஸ் என்ஜினியர் கைது
ஹைதராபாத்: ஆந்திராவில் முன்னாள் விமான பணிப்பெண்ணை அவரது கணவர் கொலை செய்த வழக்கில் இன்போசிஸ் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வந்தவர் ரீத்து சரீன்(28). ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணிப்பெண்ணாக இருந்தவர். அவரது கணவர் தொழில் அதிபர் சச்சின் உப்பல். அவர் தனது மனைவியிடம் வரதட்சணை வாங்கி வருமாறு கூறி அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஜம்ஷெத்பூரில் ரீத்துவின் பெற்றோருக்கு சொந்தமான வீட்டை விற்று பணம் அளிக்குமாறு கேட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சச்சின் தனது நண்பர் ராகேஷ் குமாருடன் வீட்டில் டிவி பார்த்துள்ளார். ராகேஷ் இன்போசிஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிகிறார். சச்சின் படுக்கையறைக்கு சென்று தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது அவர் தலையணையை எடுத்து ரீத்துவின் முகத்தில் வைத்து அழுத்தி அவரை கொலை செய்தார்.
ரீத்து இறந்து கிடந்தபோது அவரது முகத்தில் தலையணை இருந்ததை ராகேஷ் பார்த்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சச்சினை புதன்கிழமை கைது செய்தனர். சம்பவத்தை பார்த்தும் அது பற்றி தெரிவிக்காமல் இருந்ததற்காக ராகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
வரதட்சணை கேட்குமாறு சச்சினை தூண்டிவிட்ட அவரது பெற்றோரை போலீசார் தேடி வருகிறார்கள்.