1 மணிக்கு பதில் 10.15க்கு ஆஸி.க்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம்: கிரிக்கெட் பயணிகள் பெரும் ரகளை
டெல்லி: சனிக்கிழமை டெல்லியில் இருந்து சிட்னி கிளம்ப வேண்டிய ஏர் இந்தியா விமானம் 9 மணிநேரத்திற்கும் மேல் தாமதமாக கிளம்பியது. இதனால் அடிலெய்டில் நடக்கும் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை போட்டியை காண முடியாது என்ற கோபத்தில் ரசிகர்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியை காண இந்திய ரசிகர்கள் டெல்லி விமான நிலையத்தில் இருந்து சிட்னி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் அடிலெய்ட் செல்ல சனிக்கிழமை விமான நிலையத்திற்கு வந்தனர்.
மதியம் 1 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் சிப்பந்திகள் தட்டுப்பாட்டால் கிளம்பாமல் நின்று கொண்டிருக்கிறது. இந்த விமானத்தில் கிளம்ப பயணிகள் காலை 10 மணிக்கே விமான நிலையத்திற்கு வந்துவிட்டனர். மதியம் 1 மணிக்கு கிளம்பினால் தான் 12 மணிநேரம் பயணம் செய்து அடிலெய்ட் நகரை உரிய நேரத்தில் அடைய முடியும். ஆனால் விமானம் கிளம்ப தாமதமாகும் என்று மட்டுமே பல முறை அறிவிக்கப்பட்டது.
இதனால் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து ரகளையில் ஈடுபட்டனர். மாலை வரை பயணிகள் போராட்டம் நடத்தனர். இறுதியாக விமானம் இரவு 10.15 மணிக்கு கிளம்பியது. அந்த விமானத்தில் கிளம்பிய ரசிகர்களால் இன்று மதியம் வரை அடிலெய்ட் நகரை அடைய முடியாது. அவர்களால் இந்திய அணியின் ஆட்டத்தை காண முடியாது.
இது குறித்து பயணி ஒருவர் கூறுகையில்,
நாங்கள் 8 பேர் அடிலெய்டில் நடக்கும் போட்டியை காண செல்கிறோம். விமான டிக்கெட்டுக்கு ஒவ்வொருவரும் ரூ.1 லட்சம் செலவு செய்துள்ளோம் என்றார்.