10வது பாஸ்.. +1ல் பெயில்.. டுபாக்கூர் சர்ட்டிபிகேட் கொடுத்து வேலையில் சேர்ந்த ஏர் இந்தியா விமானி
டெல்லி : ஏர் இந்தியாவின் மூத்த விமானி ஒருவர், போலி பிளஸ் 2 சான்றிதழைத் தந்து பணிக்கு சேர்ந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் சஸ்பெண்ட் ஆகியுள்ளார். அவர் வெறும் பத்தாவது மட்டுமே பாஸ் ஆகியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் ஏர்பஸ் கமாண்டராக பணிக்கு சேர்ந்தார் ஏ பி கட்டாலே. இந்த நிலையில், இவரது அக்கா டாக்டர் மனீஷ் கனகாளி ஒரு புகார் அளித்தார். அதில், தனது தம்பி, பத்தாவது படித்துள்ளதாகவும், பிளஸ் ஒன்னில் பெயில் ஆனதால், பிரைவேட்டாக பிளஸ்டூ தேர்வு எழுதியாகவும், அதில் பெயில் ஆகி விட்டதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து போலிச் சான்றிதழைக் கொடுத்து ஏர் இந்தியாவில் பணிக்கு சேர்ந்திருப்பதாகவும், விமான போக்குவரத்து ஆணையரிடம் அவர் அளித்த புகாரி்ல் கூறியிருந்தார்.
அவரின் புகாரின் அடிப்படையில் கட்டாலேயின் சான்றிதழ் மீண்டும் சரி பார்க்கப்பட்டது. அப்போது, அவர் போலி கல்விச் சான்றிதழைக் கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கட்டாலேவை பணி இடைநீக்கம் செய்து ஏர் இந்தியா உத்தரவிட்டது. இந்தத் தகவலை ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக விமான போக்குவரத்து ஆணையத்துக்கு தகவல் தெரிவித்திருப்பதாகவும், கட்டாலே மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மெற்கொள்ளப் படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு முதல் இதே போல் போலிச் சான்றிதழைக் கொடுத்து பணியில் சேர்ந்ததாக, பல்வேறு விமான நிறுவனங்களில் இருந்து சுமார் 15க்கும் மேற்பட்டோர் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.