டெல்லி- சான்பிரான்சிஸ்கோ இடையே டிச. 2 முதல் நான் ஸ்டாப் ஏர் இந்தியா விமானம்
டெல்லி: பிரதமர் மோடி சிலிக்கான் வேலிக்குச் சென்றதைக் கெளரவிக்கும் வகையில் டிசம்பர் 2ம் தேதி முதல் டெல்லி - சான்பிரான்சிஸ்கோ இடையிலான நேரடி இடை நில்லா விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விமான சேவை சிலிக்கான் வேலியில் பணியாற்றி வரும் இந்திய ஐடி துறையினரின் நீண்ட காலக் கோரிக்கையாகும். தற்போது மோடி பயணத்தையொட்டி அதை நனவாக்கியுள்ளது ஏர் இந்தியா.
இதுதொடர்பான அறிவிப்பை இன்று சாப் மையத்தில் நடந்த பேச்சின் இறுதியில் பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த விமானமானது டெல்லியிலிருந்து கிளம்பி சான்பிரான்சிஸ்கோவில்தான் போய் நிற்கும். இடையில் எங்கும் நிற்காது.
மேலும் தொடர்ச்சியாக 14 மணி நேரம் இது பறக்கவிருப்பதால் உலகிலேயே நீண்ட நேரம் தொடர்ந்து பறக்கும் முதல் விமான சேவை என்ற பெயரும் இந்த சேவைக்குக் கிடைக்கவுள்ளது.
அமெரிக்காவில் இதுவரை நியூயார்க், நெவார்க், சிகாகோ ஆகிய நகரங்களுக்கு ஏர் இந்தியா தனது சேவையை இயக்கி வருகிறது. தற்போது சான்பிரான்சிஸ்கோவும் இதில் இணைகிறது.
டிசம்பர் 2ம் தேதி முதல் புதன்கிழமை, வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விமான சேவை இயக்கப்படும்.