சர்ச்சை சாமியாரின் கையில் உ.பி.. யார் இந்த யோகி ஆதித்யநாத்?
ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவர் ஆதித்யநாத். 12வது லோக்சபா தேர்தலின்போது, 26 வயதிலேயே எம்.பியாகி குறைந்த வயதில் எம்.பியானவர் என்ற பெருமையை ஈட்டியவர். திருமணத்தை மறுத்து துறவு வாழ்க்கை வாழ்பவர்.
லக்னோ: உ.பி. முதல்வராக பாஜக எம்.எல்.ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யோகி ஆதித்யநாத், தீவிர வலதுசாரி இந்துவாகும்.
1972ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி பிறந்தவர். இயற்பெயர் அஜய்சிங். இம்மாநிலத்தின் கோரக்பூர் லோக்சபா தொகுதியிலிருந்து 5 முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரது தொடர் வெற்றிகளை கவனித்துதான் அவரையே முதல்வராக பாஜக முன்னிருத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவர் ஆதித்யநாத். 12வது லோக்சபா தேர்தலின்போது, 26 வயதிலேயே எம்.பியாகி குறைந்த வயதில் எம்.பியானவர் என்ற பெருமையை ஈட்டியவர். திருமணத்தை மறுத்து துறவு வாழ்க்கை வாழ்பவர்.
2005ம் ஆண்டில், கிறிஸ்தவர்களை இந்துக்களாக மதம் திரும்ப செய்வதாக இவர் அறிவித்து செயல்படுத்திய நடவடிக்கைகளால் நாடு முழுக்க கவனம் ஈர்த்தார்.
பல்வேறு சர்ச்சை கருத்துக்களை தொடர்ச்சியாக தெரிவித்து வருபவர் இவர். சூரிய நமஸ்காரம் வேண்டாம் என்போர் இந்தியாவை விட்டு வெளியேறலாம் என 2015ல் ஒரு கருத்தை கூறியிருந்தார்.
லஷ்கர் தீவிரவாத குழு தலைவன் ஹபீஸ் சையதுவுடன், நடிகர் ஷாரூக்கானை ஒப்பிட்டு பேசியிருந்தார் ஆதித்யநாத். பாஜகவுக்கும் இவருக்குமே முன்பு உரசல்கள் இருந்து வந்துள்ளன. 2006ல் விராட் ஹிந்து மகாசம்மேளனம் என்ற பெயரில் கோரக்பூரில் விழா நடத்தினார். அதேநேரம், லக்னோவில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது. 2007 சட்டசபை தேர்தலில் கிழக்கு உ.பியில் தனக்கு தேவைப்படும் வேட்பாளர்களுக்கு 100க்கும் மேற்பட்ட தொகுதிகளை ஒதுக்க கேட்டார். கட்சியுடன் மோதினார். ஆர்எஸ்எஸ் தலையிட்ட பிறகு 8 சீட்டுகள் அவரது ஆதரவாளர்களுக்கு கிடைத்தன.
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்க பாஜக விப் பிறப்பித்தும் அதை மீறிய அக்கட்சி எம்.பிக்களில் இவரும் ஒருவர்.