முடிவுக்கு வந்தது சைக்கிள் பஞ்சாயத்து.. அகிலேஷுக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
அகிலேஷ் யாதவுக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்தை அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு ஓதுக்கிடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாதிக் கட்சியில் தந்தை முலாயம்சிங் யாதவ், மகன் அகிலேஷ் யாதவிடையே கடும் அதிகாரப்போட்டி நிலவுகிறது. கட்சியின் இரு அணியும் சைக்கிள் சின்னத்திற்கு உரிமை கோரி இருந்தனர். இதுகுறித்து உரிய ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர்.
இதையடுத்து பெரும்பான்மையை நிரூபிப்பவருக்கே சைக்கிள் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இருதரப்பும், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்டத் தலைவர்களின் ஆதரவுக் கையெழுத்து அடங்கிய பிரமாணப் பத்திரத்தையும் இருவரும் தாக்கல் செய்தனர்.
இந்தநிலையில் பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் அகிலேஷ் யாதவின் அணியில் இருப்பதால் சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்தை அகிலேஷ் யாதவ் அணிக்கு ஒதுக்க தேர்தல் கமிஷன் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், அகிலேஷ் யாதவை அக்கட்சியின் தேசிய தலைவராகவும் மாநில தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவால் அகிலேஷின் தந்தை முலாயம் சிங் ஏமாற்றத்தில் உள்ளார்.