'வீக்'கான ஜவாஹிரியால் பின்தங்கும் அல் கொய்தா
டெல்லி: சார்லி ஹெப்டோ அலுவலகத்தை தாக்க அய்மான் அல் ஜவாஹிரி தான் உத்தரவிட்டார் என்பதை தெரிவிக்க அரபிய தீபகற்பத்தில் உள்ள அல் கொய்தா முயற்சி செய்தது.
ஜவாஹிரி தலைமையில் அல் கொய்தா உலகின் பயங்கரமான தீவிரவாத அமைப்புகள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சென்றுவிட்டது. இந்த பட்டியலில் ஐ.எஸ்.ஐ.எஸ். முதலிடத்திலும், போக்கோ ஹரம் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
அல் கொய்தாவின் பலம் குறைய பல்வேறு காரணங்கள் உள்ளன. ஜவாஹிரியின் தலைமை மீது நம்பிக்கை இல்லாதது தான் அல் கொய்தா சரிய முக்கிய காரணம். அல் கொய்தாவை காப்பாற்ற ஜவாஹிரி எடுத்த முயற்சியும் தோல்வி அடைந்ததால் அவர் ஆப்கானிஸ்தானின் குகைக்குள் அமர்ந்து பல்லைக் கடிக்க வைத்துள்ளது.
தலைமை
ஒசாமா அல்லது அன்வர் அல் அவ்லாகி போன்று ஜவாஹிரியால் ஜொலிக்க முடியவில்லை. ஒசாமாவுக்கு நெருக்கமானவர் என்பதால் ஜவாஹிரிக்கு அந்த பதவி கிடைத்தது என்று பல அல் கொய்தா தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர். ஜவாஹிரி இன்று ஆதரவாளர்கள் இன்றி குகைக்குள் ஒரு பொம்மை போன்று உள்ளார். அவர் பேச்சில் சுரம் இல்லை. கடமையே என்று அவர் அமெரிக்காவை எதிர்க்கிறார். இந்தியாவில் அல் கொய்தாவின் கிளை துவங்கப்படும் என்று ஜவாஹிரி அண்மையில் அறிவித்தார். அந்த வீடியோ பற்றி அனைவரும் ஒரு நாள் பேசிவிட்டு அதை மறந்துவிட்டனர்.
கமாண்டர்
தலைவர்களின் பேச்சை கேட்க யாரும் அல் கொய்தா அமைப்பில் சேர்வது இல்லை. அவர்களுக்கு தீவிரவாத தாக்குதல் போன்று வேறு எதுவும் மகிழ்ச்சி அளிக்காது. இது ஜவாஹிரி தலைமையில் நடக்காது.
ஒசாமா பின் லேடன் தலைவராக இருக்கையில் இல்யாஸ் காஷ்மிரி என்பவர் அமைப்பின் 313 பிரிவுகளுக்கு தலைமை தாங்கி அமெரிக்காவை எதிர்த்தார். தற்போது காஷ்மிரி போன்ற ஒரு தலைவர் இல்லை. இதனால் தான் சிரியா, ஈராக் மற்றும் நைஜீரியாவில் அல் கொய்தாவின் பலம் குறைந்துவிட்டது.
இந்திய கிளை
இந்தியாவில் கிளை துவங்கப்படும் என்ற ஜவாஹிரி தெரிவித்தார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி போன்று இல்லாமல் ஜவாஹிரி வெறும் பேச்சு தான்.
நன்கொடை
குகைக்குள் இருந்து கொண்டு அவ்வப்போது வீடியோ வெளியிட விரும்புகிறார் ஜவாஹிரி. அதே சமயம் ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் போக்கோ ஹரம் இறங்கி வேலை செய்கின்றன. இதனால் அல் கொய்தாவுக்கு நன்கொடையும், ஆதரவும் அளித்து வந்த சவுதி அரேபியா ஆட்கள் தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பல எண்ணெய் கிணறுகளை வைத்து சம்பாதிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு நன்கொடை தேவையில்லை. ஆனால் அல் கொய்தாவுக்கு நிச்சயம் நன்கொடை தேவைப்படுகிறது.
ஐஎஸ்ஐ
இந்தியாவில் அல் கொய்தா தனது கிளையை துவங்க அறிவித்ததில் ஐஎஸ்ஐயின் வேலையும் உள்ளது என்பது தெரிந்த விஷயம். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு ஆப்கானிஸ்தானில் கிளை துவங்கினால் அதை தன்னால் கட்டுப்படுத்த முடியாது என்று அதற்கு தெரியும். அதனால் தான் அது அல் கொய்தாவுக்கு ஆதரவு அளிக்கிறது. இந்தியாவில் அல் கொய்தா தனது கிளையை துவங்க ஐஎஸ்ஐ அதற்கு திட்டம்போட்டுக் கொடுத்தது. அதாவது பாகிஸ்தானைச் சேர்ந்த கப்பல் ஒன்றை கடத்தி அதை வைத்து இந்தியா மற்றும் அமெரிக்க கப்பல்களை தாக்க ஐஎஸ்ஐ திட்டம் போட்டுக் கொடுத்தது.
ஆனால் திட்டம் சொதப்பி இறுதியில் இந்த முயற்சியில் அல் கொய்தா ஆட்கள் பலியாகினர்.
தலைவராக தோல்வி
ஒரு காலத்தில் பலரையும் நடுங்க வைத்த அல் கொய்தா அமைப்பில் தற்போது ஒற்றுமை இல்லை. ஜவாஹிரியால் அமைப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் தான் அரபிய தீபகற்பம், சிரியா, ஈராக்கில் அல் கொய்தா அமைப்பின் கிளைகள் துவங்கப்பட்டுவிட்டன.
சார்லி ஹெப்டோ தாக்குதல்
பிறரின் கவனத்தை ஈர்க்க அல் கொய்தா துடித்துக் கொண்டிருக்கிறது. இதற்காகத் தான் அது சார்லி ஹெப்டோ தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. டென்மார்க்கை சேர்ந்த பத்திரிக்கையில் பணியாற்றும் கார்டூனிஸ்டுகளை தாக்க மிக்கி மவுஸ் திட்டத்தை முதலில் வகுத்ததே அல் கொய்தா தான். அண்மையில் சார்லி ஹெப்டோ தாக்குதலுக்கு பொறுப்பேற்று அல் கொய்தா வெவியிட்ட வீடியோ உண்மையானது தான் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.