14-வது ஜனாதிபதி தேர்தல்: தமிழகத்தில் சில மணிநேரங்களிலேயே வாக்குப் பதிவு முடிந்தது!
நாட்டின் 14-வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப் பதிவு தமிழகத்தில் நிறைவடைந்துள்ளது.
சென்னை: நாட்டின் 14-வது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கிய சில மணிநேரத்தில் நிறைவடைந்தது. சென்னையில் மொத்தம் 232 எம்.எல்.ஏக்கள், கேரளா எம்.எல்.ஏ மற்றும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வாக்களித்தனர். திமுக தலைவர் கருணாநிதி வாக்களிக்கவில்லை.
ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக ராம்நாத் கோவிந்தும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மீராகுமாரும் களத்தில் உள்ளனர். நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலகங்களில் இன்று காலை 10 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.
சென்னையில் தலைமை செயலகத்தில் நண்பகல் 12 மணியளவில் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. தமிழக எம்.எல்.ஏக்கள் 232 பேரும் கேரளா எம்.எல்.ஏ. அப்துல்லா மற்றும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாக்களித்தனர்.
உடல்நலக் குறைவால் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி திமுக தலைவர் கருணாநிதி இத்தேர்தலில் வாக்களிக்கவில்லை. மேலும் காவிரி பிரச்சனையை முன்வைத்து பாமக எம்.பி. அன்புமணி ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணித்தார்.
மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு நேரம் முடிவடைந்ததும் வாக்குப் பெட்டிகள் அனைத்தும் உரிய பாதுகாப்புடன் டெல்லிக்குக் கொண்டு செல்லப்படும்.
Recommended Video
புதுவையிலும் நிறைவு
இதேபோல் புதுவையில் வாக்குப் பதிவு நண்பகலிலேயே நிறைவடைந்தது. அம்மாநிலத்தின் 30 எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர்.