ஜெயலலிதா பதவியேற்பு விழாவை போட்டிபோட்டு நேரடி ஒளிபரப்பு செய்த கன்னட சேனல்கள்!
பெங்களூர்: ஜெயலலிதா பதவியேற்பு விழா நிகழ்ச்சிகளை கன்னட செய்திச் சேனல்கள் அத்தனையும் நேரடியாக ஒளிபரப்பு செய்தன.
ஜெயலலிதாவுக்கும் கர்நாடகாவுக்கும், மிக நீண்ட தொடர்பு உள்ளது. ஜெயலலிதா கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தில் பிறந்தவர் என்பதில் தொடங்கி, தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில், அவரை குற்றவாளி என்று பெங்களூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது மற்றும் ஹைகோர்ட் விடுதலை செய்தது வரை தொடருகிறது கர்நாடகாவுடனான அவரது எதிர்பாராத பந்தம்.
எனவே, கன்னட மக்களுக்கு ஜெயலலிதா குறித்த தகவல்களை அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் உள்ளது. ஜெயலலிதா பெங்களூர் சிறையில் இருந்தபோதும், கன்னட செய்தி சேனல்கள் போட்டி போட்டு செய்திகளை ஒளிபரப்பி வந்தன. தமிழ் சேனல்களை விட அவைதான் அதிக நேரத்தை இதற்காக ஒதுக்கின.
இதேபோன்று, நேற்று ஜெயலலிதா ஆளுநரை சந்தித்த நிகழ்வு மற்றும் இன்றைய முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி ஆகியவற்றையும் கன்னட செய்தி சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்தன.
கன்னடத்தில் முன்னணியில் உள்ள செய்தி சேனல்களான டிவி9, சுவர்ணா நியூஸ், பப்ளிக் டிவி, பி டிவி, சமயா டிவி போன்றவற்றில் ஜெயலலிதா பதவியேற்பு காட்சிகள் மட்டுமின்றி, அவர் வீட்டில் இருந்து கிளம்பி பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்தது வரையிலான நிகழ்வுகளும் நேரடியாக காண்பிக்கப்பட்டன. ஆனால், சன் டிவி குரூப்பின், உதயா நியூஸ் தொலைக்காட்சியில் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.
அந்த தொலைக்காட்சிகளின் டிஷ்கஷன்களில் அமர்ந்திருந்தவர்கள், ஜெயலலிதா வழக்கில் கடந்து வந்த பாதை குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் கருத்துக்களை தெரிவித்தனர். பல டிவிகளிலும், கர்நாடக அரசு, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கருத்து கூற வந்திருந்த அரசியல் பிரமுகர்கள், சட்ட வல்லுநர்கள் தெரிவித்தபடி இருந்தனர்.
பதவியேற்பு விழா முடிந்த பிறகும், ஜெயலலிதா நடித்த பழைய கன்னட பட பாடல்களை சில டிவி சேனல்கள் ஒளிபரப்பின.