ஆந்திராவின் அடுத்த தலைநகர் அமராவதி குறித்து உங்களுக்கு என்ன தெரியும்?
அமராவதி: ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதி தேர்வு செய்யப்பட்டு, இதுகுறித்து ஆந்திர சட்டசபையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க ஹைதராபாத் நகரம் தற்போது ஆந்திரா மற்றும் ஆந்திராவிலிருந்து பிரிக்கப்பட்ட தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் தலைநகராக இருந்து வந்தது.
இந்த நிலையில், ஆந்திர மாநிலத்திற்கான புதிய தலைநகரை தேர்ந்தெடுக்கும் பணியில் அம்மாநில அரசு ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தின் தலைநகராக வரலாற்று சிறப்பும் பழம் பெருமையும் மிக்க அமராவதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புதிய தலைநகர் அமராவதி
நேற்று கூடிய ஆந்திர மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குண்டூர் மாவட்டத்தில் கிருஷ்ணா நதியையொட்டி அமைந்திருக்கும் அமராவதிதான் புதிய தலைநகராகிறது.
தென்னிந்தியாவின் காசி
அமராவதி நகரம், "தென்னிந்தியாவின் காசி" என்று போற்றப்படுகிறது. இந்த நகரில் ஆதி சிவனின் பிரசித்தி பெற்ற அமரேஸ்வரா கோயில் உள்ளது.
புத்த ஆலயம்
இது மட்டுமின்றி பிரசித்தி பெற்ற புத்த ஆலயம் ஒன்றும் அமைந்துள்ளது. புத்த மத தலைவரான தலாய் லாமா சில வருடங்களுக்கு முன்பு இங்கு ஒரு விழா நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் வரவேற்பு
இது போன்று பல்வேறு சிறப்புகளைக் கொண்ட அமராவதி நகரம் மாநிலத்தின் தலைநகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர்.
மக்களின் தலைநகரம்
மேலும், அமராவதி நகரை "மக்களின் தலைநகரம்" என்று குறிப்பிட்டுள்ள முதல்வர் சந்திர பாபு நாயுடு, அரசு இந்த தலைநகரை நவீன நகரமாக மாற்றும் என்று தெரிவித்துள்ளார்.