தீவிரவாதிகள் சதித்திட்டம்.. பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை இன்று தொடங்குகிறது
ஜம்மு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமர்நாத் புனித யாத்திரை இன்று தொடங்குகிறது. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பனி சூழ்ந்த மலைகளுக்கு நடுவே, இயற்கையாக உருவாகியுள்ள குகை ஒன்றில், தானாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க, நாடு முழுவதும் இருந்து, இந்துக்கள் புனித யாத்திரை, மேற்கொள்வது வழக்கம்.
ஆண்டின் பெரும்பாலான மாதங்கள், பனியால் சூழ்ந்திருக்கும் குகையில், சில மாதங்கள் மட்டுமே, பனி விலகியிருக்கும். அந்த காலத்தில், லட்சக்கணக்கானோர், பனி லிங்கத்தை தரிசிப்பதை, புனிதமாக கருதுகின்றனர்.
இந்த ஆண்டுக்கான வருடாந்திர அமர்நாத் யாத்திரை நாளை தொடங்குகிறது. 4 ஆயிரம் பக்தர்களை கொண்ட முதல் குழு, இன்று ஜம்முவில் இருந்து பயணம் மேற்கொள்கிறது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், கடந்த சில நாள்களாகத் தீவிரவாதத் தாக்குதல் அதிகரித்திருப்பதாலும் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையொட்டி, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.