ஏ ஃபார் 'ஆம்பூர் பிரியாணி'.. பி ஃபார் 'பார்'! ஐடி சிட்டியும் ஆம்பூர் பிரியாணி ஹோட்டல்களும்!
பெங்களூர்: தகவல் தொழில்நுட்ப தலைநகரம் என்று அழைக்கப்படும் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில், ஆம்பூர் பிரியாணி கடைகள் என்ற பெயர்களில் பல பிரியாணி கடைகள் மூளைத்து, அவற்றில் வியாபாரம் , சக்கைபோடு போட்டுவருகிறது.
பிரியாணி சாப்பாடு விவகாரத்தில் கர்நாடகா எப்போதுமே தமிழகத்தைவிட பின்னுக்குதான் இருந்துள்ளது. கர்நாடகாவை பொறுத்தளவில் தடுக்கிவிழுந்தால், சாகர் என்ற பெயரில் சைவ ஹோட்டல்கள்தான் கண்ணுக்கு தெரியும்.
விலை அதிகம்
பெங்களூரை பொறுத்தளவில், பிரியாணி என்பதெல்லாம் பெரிய ரெஸ்டாரண்டுகளில் மட்டுமே கிடைக்க கூடிய பதார்த்தமாக இருந்தது. சிக்கன் பிரியாணி என்றால் 120 ரூபாய்க்கு மேலும், மட்டன் பிரியாணி என்றால் 150 ரூபாய்க்கு மேலுமாகவே விலை இருந்தது.
ஆம்பூருக்கு நன்றி
இந்நிலையில்தான், கடந்த ஒரு சில வருடங்களாக மலிவு விலையில் பிரியாணி கிடைக்க தொடங்கியுள்ளது. மட்டுமில்லாமல், எங்கும், எதிலும், எளிதில், கிடைக்க கூடிய பதார்த்தமாகவும் பிரியாணி மாறியுள்ளது. இதற்கு பெங்களூர்வாசிகள், ஆம்பூருக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.
பிரியாணியும், பார்களும்
பெங்களூரில் ஏ ஃபார் என்றால் ஆப்பிள் கிடையாது. ஆம்பூர்தான். பி ஃபார் என்றால் பால் கிடையாது, பார் (மதுபான கடைகள்) என்று டிக்ஷனரி போட்டுவிடலாம். இந்த நகரில், தடுக்கி விழுந்தால் ஒன்று ஆம்பூர் பிரியாணி கடை முன்பாக விழுவீர்கள் அல்லது, ஒரு பார் கடை முன்பாக விழுவீர்கள். அந்த அளவுக்கு இவை இரண்டும் நீக்கமற நிறைந்துள்ளன.
குறைந்த விலை
ஆம்பூர் பிரியாணி கடைகள் வருகையால் இப்போதெல்லாம் பெங்களூர்வாசிகளுக்கு ரூ.50 முதலே சுவையான தம் பிரியாணி (அப்படித்தான் சொல்லிக்கொள்கிறார்கள்) கிடைக்க தொடங்கியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் ஆதரவு பெருகிவிட்டதால், சென்னையை போலவே, பார்க்குமிடமெல்லாம் பிரியாணி கடைகளால் நிரம்புகிறது பெங்களூர்.
சிறு தொழில்
இந்த ஆம்பூர் பிரியாணி கடைகளுக்கு பெரிதாக இடவசதி தேவையில்லை. 20க்கு 20 அடி கொண்ட இடமே இதற்கு போதுமானது என்பதால், சிறு தொழில் போல பலருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் தொழிலாக பிரியாணி கடைகள் மாறியுள்ளன. பெரும்பாலும் தமிழகத்தை அதிலும் வட தமிழகத்தை சேர்ந்தவர்கள்தான் ஆம்பூர் பிரியாணி கடைகளை வைத்து நடத்துகிறார்கள்.
தமிழ் ஓனர்கள்
டொம்மலூர் பஸ் நிலையம் எதிரேயுள்ள ஆம்பூர் தம் பிரியாணி கடைக்கு, இப்போதுதான் வயது ஐந்து மாதம். ஆனால் கூட்டமோ அபாரம். சிக்கன் பிரியாணி-70 ரூபாய், குஸ்கா-40 ரூபாய், கபாப்-30 ரூபாய், முட்டை-10 ரூபாய் என்ற விலையில் இங்கு விற்பனையாகிறது. சென்னையை சேர்ந்த மணிகண்டன்தான் இதற்கு ஓனர். பெங்களூரில் ஆம்பூர் பிரியாணி கடைகள் அபார வளர்ச்சி பெறுவதை அறிந்து குடும்பத்தோடு இங்கு வந்து கடை நடத்துகிறாராம் இவர்.
தெற்கு பெங்களூரில்
ஆம்பூர் பிரியாணி கடைகள் 2011க்கு பிறகுதான் பெங்களூரில் மளமளவென பெருகியதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகிறார்கள். குறிப்பாக, பொம்மனஹள்ளி, கோரமங்களா, டொம்மலூர், பிடிஎம் லே-அவுட் போன்ற தென் பெங்களூர் ஏரியாக்களில் ஆம்பூர் பிரியாணி கடைகளின் மணம் எட்டு திக்கிலும் பரவுகிறது. இந்த ஏரியாக்களில் எல்லாம், 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் 7 ஆம்பூர் பிரியாணிக் கடைகளாவது இருக்கின்றன.
பிரியாணி வரலாறு
நவாப் காலத்தில் ஆம்பூரில் பிரியாணி அறிமுகமானதாகவும், வாணியம்பாடி சுற்றுவட்டார முஸ்லிம்கள் அந்த பிரியாணிக்கு மேலும் சுவை கூட்டி சமையல் செய்ய தொடங்கியதாகவும், எனவேதான் ஆம்பூர் என்ற புவிசார் குறியீட்டின் பெயரில் இந்த பிரியாணி ஃபேமஸ் ஆனதாகவும், ஒரு கடைக்காரர் நம்மிடம் தெரிவித்தார்.
ஹைதராபாத் போயே போச்சு
முத்தேகவுடா என்ற பெங்களூர்வாசி இதுகுறித்து கூறுகையில், முன்பெல்லாம் பெங்களூரில், ஹைதராபாத் பிரியாணி என்பதுதான் ஃபேமசாக இருந்தது. ஆனால் அவை விலை அதிகம். இப்போது, குறைந்தவிலையில் கிடைக்கும் ஆம்பூர் பிரியாணி நாவுக்கு சுவையாக உள்ளது. எனவே, நான் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது ஆம்பூர் பிரியாணியை சுவைக்கிறேன் என்றார்.
நல்லா சாப்பிடுங்க, நல்லதையே சாப்பிடுங்க
ஆம்பூர் பிரியாணி என்று போர்டை மாட்டிக்கொண்டு, ஆகமோசமான பிரியாணிகளை தயாரித்து வாடிக்கையாளர்களை முகம் சுளிக்க வைக்கும் ஹோட்டல்களும் இந்த கூட்டத்தில் பெருத்து விட்டதாக சில வாடிக்கையாளர்கள் அங்கலாய்க்கிறார்கள். நல்ல பிரியாணி கடையை நாம்தான் தேடி சாப்பிட வேண்டும் என்பது அவர்கள் கருத்தாக உள்ளது.