16 வருடங்களுக்கு முன்பு நடந்த பெங்களூர் சர்ச் குண்டுவெடிப்பு.. முக்கிய குற்றவாளி கைது
பெங்களூர்: பெங்களூர் உட்பட கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளிலுள்ள சர்ச்சுகளில் வெடிகுண்டு வைத்த வழக்கில் சிறையில் இருந்து தப்பி சென்று தலைமறைவாக இருந்த அமிர் அலியை போலீசார் கைது செய்துள்ளனர்.
2000மாவது ஆண்டில் பெங்களூர் ஜேஜே நகர், ஹூப்ளி, குல்பர்கா போன்ற நகரங்களிலுள்ள சர்ச்சுகளில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 11 பேருக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. 12 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூர் மத்திய சிறையில் இருந்தபோதே 3 பேர் மரணமடைந்தனர். ஏழு பேர் தப்பியோடிவிட்டனர்.
தப்பியோடிய முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் அமிர் அலி. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவை சேர்ந்தவர். அமிர் அலியை கர்நாடக போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.