மகாத்மா காந்தி ஒரு சாமர்த்தியமான வியாபாரி.. அமித்ஷா பேச்சால் சர்ச்சை.. காங்கிரஸ் கடும் கண்டனம்
மகாத்மா காந்தி ஒரு சாமர்த்தியமான வியாபாரி என்று பாஜக தலைவர் அமித்ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராய்ப்பூர்: நாடு சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரஸ் கட்சியை கலைக்க விரும்பிய மகாத்மா காந்தி ஒரு சாமர்த்தியமான வியாபாரி என்று பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அவரது பேச்சுக்கு காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமித்ஷா, நாடு சுதந்திரம் அடைவதற்காக தொடங்கப்பட்ட இயக்கமே காங்கிரஸ்.
அந்த இயக்கத்தில் வலது மற்றும் இடதுசாரி சிந்தனைகள் கொண்ட பலரும் இடம் பெற்றிருந்தனர். சுதந்திரம் பெற்ற பின்னர் காங்கிரஸ் இயக்கத்தை கலைக்கவே காந்தி முடிவு செய்திருந்தார். அவர் ஒரு புத்திசாலியான 'பன்யா' என்று தெரிவித்தார். பன்யா என்பது குஜராத்தில் வணிகம் புரியும் ஒரு இனத்தினரைக் குறிக்கும் சொல் ஆகும்.
அமித்ஷாவின் பேச்சுக்கு காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா டிவிட்டர் பதிவில், சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் நாட்டை பிரிப்பதற்கே இந்து மகாசாபாவை ஒரு கருவியாக பிரிட்டீஷார் பயன்படுத்திக் கொண்டனர். அதன் பின்னர் அதேவேலையை பாஜகவும் செய்துவருவதாக தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி கண்டனம்:
இதுதொடர்பாக டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காந்தி குறித்து அமித்ஷா கூறிய கருத்துகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், தேசப்பிதாவான காந்தி குறித்து பேசும்போது மிகவும் மரியாதையுடன் குறிப்பிட வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.