கர்நாட சட்டசபை தேர்தல்... பெங்களூரில் 'டேரா' போட வீடுபார்க்கும் அமித் ஷா!
கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தல் பணிக்காக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பெங்களூரில் வீடு பார்த்து குடியேற இருக்கிறாராம்.
பெங்களூர்: கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பணிகளுக்காக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பெங்களூரில் வீடு பார்த்து குடியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன..
2013-ஆம் ஆண்டு கர்நாடகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அந்த மாநிலத்துக்கு வரும் 2018-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.
தென்னிந்தியாவில் பாஜக காலூன்ற கர்நாடக மாநிலத்தை நுழைவுவாயிலாக கருதுகிறது. ஆகையால் விட்டதை பிடிக்கும் முயற்சியில் பாஜக உள்ளது. அதற்கு சரியான முடிவாக பெங்களூரில் தங்கியிருந்து கட்சி பணி ஆற்றுவதே என அமித் ஷா கருதுகிறார்.
அந்த மாநில பாஜக மூத்த தலைவர்கள் எடியூரப்பா மற்றும் ஈஸ்வரப்பா ஆகியோரிடையே மோதல் வலுத்துள்ளதால் அமைதி காத்து வரும் அமித் ஷா வரும் ஆகஸ்ட் மாதத்தில் பெங்களூருக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அமித்ஷாவின் உதவியாளர்கள் பெங்களூர் விமான நிலையத்துக்கு அருகில் பங்களா ஒன்றை தேடி வருகின்றனர். கிடைத்தவுடன் குஜராத்திலிருந்து பெங்களூர் வீட்டில் பால் காய்ச்சுவாராம் அமித் ஷா.