ஆபாச எஸ்.எம்.எஸ்.... போலீசில் புகார் கொடுத்த அமிதாப் பச்சன்
மும்பை: நடிகர் அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என குற்றச்சாட்டு தெரிவித்துள்ள நிலையில், தனக்கு கடந்த ஒரு வருடம் ஆக ஆபாசம் நிறைந்த எஸ்.எம்.எஸ். தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன என போலீசில் புகார் அளித்துள்ளார்.
72 வயதாகும் நடிகர் அமிதாப்பச்சன் இன்றைக்கும் பரபரப்பாக சினிமா, விளம்பரங்களில் நடித்து வருகிறார். டுவிட்டர் சமூக வலைதளம் மூலம் தனது ரசிகர்களுடனும், ஆதரவாளர்களுடன் தொடர்பு கொண்டு கருத்து வெளியிட்டு வருகிறார். டுவிட்டரில் அவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். திடீரென அவரது டுவிட்டர் பக்கத்தை சைபர்கிரைம் குற்றவாளிகள் முடக்கி அதில் ஆபாச வீடியோ பரவவிட்டனர். இதைப் பார்த்த அமிதாப்பச்சன் அதிர்ச்சியும், ஆவேசமும் அடைந்து புகார் செய்தார்.
இந்த சர்ச்சை ஒய்வதற்குள்ளாக, கடந்த ஒரு ஆண்டாக தன்னை திட்டி ஆபாசமான எஸ்.எம்.எஸ். வருவதாகவும், உடனே இது குறித்து நடவடிக்கை எடுக்கும் படியும் மும்பை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இது குறித்து ஜுஹூ காவல் நிலையத்தின் மூத்த காவல் ஆய்வாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஒரு குறிப்பிட்ட காலம் வரை, கண்ணியமற்ற, இழிவான, ஆபாசம் நிறைந்த எஸ்.எம்.எஸ். செய்திகள் எனது தனிப்பட்ட போனுக்கு அனுப்பப்பட்டு வந்துள்ளன. அந்த செய்திகளை தாங்கிய, எனது மொபைல் போன் திரையில் தெரிகின்ற வாசகங்களின் புகைப்பட நகல்களை இதனுடன் இணைத்து உள்ளேன் என கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்து, தவறு செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமிதாப் பச்சன் கேட்டு கொண்டுள்ளார்.
இதனை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஓகே... சிக்கலான நிலை! கடந்த ஒரு வருடம் உண்மையில் மோசம் நிறைந்த எஸ்.எம்.எஸ். தகவல்களை பெற்று வந்துள்ளேன். அவை அனைத்தையும் போலீசிடம் ஒப்படைத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.