அமிதாப்பின் டிவிட்டர் பக்கத்தை ஹேக் செய்து ஆபாச வீடியோவை பரப்பிய ஹேக்கர்கள்
மும்பை: நடிகர் அமிதாப்பச்சனின் டிவிட்டர் பக்கத்தை முடக்கிய சைபர்கிரைம் குற்றவாளிகள், அதன் மூலம் ஆபாச வீடியோவைப் பரப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டிவிட்டர் சமூக வலைதளம் மூலம் ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருபவர்களில் நடிகர் அமிதாப்பச்சனும் ஒருவர். இவரது டிவிட்டர் பக்கத்தினை சுமார் ஒன்றரை கோடி பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அமிதாப்பின் டிவிட்டர் பக்கத்தை சைபர் கிரைம் குற்றவாளிகள் முடக்கினர். பின்னர் அதில் ஆபாச வீடியோவையும் அவர்கள் பரவ விட்டனர்.
இதனால் அமிதாப்பும், அவரது ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக மும்பை போலீசில் அமிதாப் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து அமிதாப்பின் டிவிட்டர் பக்கம் சரி செய்யப்பட்டது.
பின்னர் இந்த சம்பவம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அமிதாப் கூறுகையில், "எனது டிவிட்டரை சிலர் கைப்பற்றி முடக்கினர். அதில் ஆபாச இணைய தளங்களை பரவ விட்டனர். யார் இதை செய்தார்கள், சிலர் முயற்சி செய்து இருக்கிறார்கள், நண்பா! எனக்கு இது தேவையில்லாதது" எனத் தெரிவித்துள்ளார்.