வன்முறை எதிரொலி.. அனந்தநாக் லோக்சபா தொகுதி இடைத்தேர்தல் மே 25 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
வரும் 12 ஆம் தேதி நடைபெறவிருந்த அனந்தநாக் லோக்சபா தொகுதி இடைத்தேர்தல் மே மாதம் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மக்களவை தொகுதியில் நடைபெறவிருந்த இடைத்தேர்தலை மே 25 ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 9ம் தேதியும், அனந்தநாக் தொகுதிக்கு 12 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கு நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது முதலே போராட்டக்காரர்கள் ஆங்காங்கே கலவரத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 7 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். வன்முறை காரணமாக அங்கு வரலாறு காணாத வகையில் வெறும் 6.5 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின.
இதனிடையே, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் காலியாக இருந்த மற்றொரு மக்களவை தொகுதியான, அனந்தநாக் மக்களவை தொகுதிக்கு வருகிற 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், அனந்தநாக் தொகுதியில் நடைபெறவிருந்த இடைத்தேர்தலை வருகிற மே மாதம் 25-ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளது. பள்ளிகள் எரிக்கப்பட்டு கலவரம் மூண்டதால், தேர்தல் நடத்தக் கூடிய சூழல் இல்லை என்பதை உணர்ந்த தேர்தல் ஆணையம், இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அறிவித்துள்ளது.