நாட்டுக்கே 'வழிகாட்டும்' தமிழகம்.. டாஸ்மாக் பாணியில் மதுபான கடை நடத்தப்போகிறது ஆந்திரா!
ஹைதராபாத்: தமிழக மாதிரியில், ஆந்திராவும், மதுபான கடைகளை சொந்தமாக நிர்வகிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திரா, இரண்டாக பிரிக்கப்பட்ட பிறகு ஏற்பட்டுள்ள நிதி சுமையை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை உதவும் என்று ஆந்திர அரசு நம்புகிறது.
ஆந்திர மாநிலம், சமீபத்தில் இரண்டாக பிரிக்கப்பட்டு, தெலுங்கானா புது மாநிலமாக உதயமானது. தெலுங்கானாவிலுள்ள ஹைதராபாத்தையே, ஆந்திராவும் தலைநகரமாக பயன்படுத்தி வருகிறது. எனவே புது தலைநகரத்தை உருவாக்கும் கட்டாயம் ஆந்திராவுக்கு ஏற்பட்டுள்ளது.
டாஸ்மாக் பாணி
புதிய நகரத்தை உருவாக்க நிதி அதிகம் தேவை. இதை கருத்தில் கொண்டு, மதுபான கொள்கையில் மாற்றம் கொண்டுவர முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார். அந்த மாற்றப்பட்ட கொள்கைப்படி, தனியாரிடமுள்ள மதுபான கடைகளை, அரசே நடத்திக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் என்று கொண்டுவந்து அரசே மதுபான கடைகளை நடத்துவதை பின்பற்ற சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார்.
தமிழகம் வந்த அமைச்சர்
ஆந்திர கலால்துறை அமைச்சர் கொல்லு ரவீந்திரா, இதுகுறித்து பரிசீலிக்க தமிழகம், கர்நாடகம், டெல்லி ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து முடித்துள்ளார். ஆந்திராவிலுள்ள 4000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபான கடைகளின் லைசென்சுகள் இவ்வாண்டு ஜூன் 30ம் தேதியுடன் காலாவதியாகின்றன. எனவே, அப்போதே புது கொள்கையை அறிமுகம் செய்ய ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.
ஆய்வு உண்மை
இதுகுறித்து ஆந்திர முதல்வரின் மீடியா ஆலோசகர் பரகலா பிரபாகர் கூறுகையில், "இந்த திட்டம் அரசிடம் இருப்பது உண்மைதான். ஆனால் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. பல மாநிலங்களை ஆய்வு செய்த பிறகு முடிவெடுக்கப்படும். அரசே மதுபான கடைகளை நடத்தினால், மதுபானம் குடிப்போர் எண்ணிக்கை அதிகரித்துவிடும் என்பது தவறு.
அரசே நடத்தினால் அதிக நன்மை
மதுபான வியாபாரத்தை அரசே கட்டுப்படுத்துவதால், தனியார் வியாபாரிகளின் ஆதிக்கம் குறைந்து, விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும். சாலையோரங்களில் உள்ள கடைகளை அகற்ற முடியும். கள்ளச்சாராயம், கலப்பட மதுவை ஒழிக்க முடியும்" என்று பரகலா பிரபாகர் தெரிவித்தார். மதுபான கடையொன்றிடமிருந்து ஆந்திர அரசுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வருவாய் வருகிறது. அரசே நடத்தினால், இது ரூ.1 கோடியாக உயரும் என்பது அரசின் கணக்காக உள்ளது.
ஊழல் மிகுந்துவிடும்
ஆனால், எதிர்பார்த்தபடி, மதுபான கடை உரிமையாளர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மதுபான கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் ராயல சுப்பாராவ் "அரசின் நடவடிக்கையால், குடிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும். வேண்டப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மதுபானத்தை கொள்முதல் செய்து அரசில் உள்ள பலரும் லாபம் பார்ப்பார்கள். இதனால் ஊழல் மிகுந்துவிடும்" என்றார். ஆந்திராவுக்கு, செம்மர ஏலம் மற்றும் மதுபான வியாபாரத்தின் மூலம்தான் அதிக வருவாய் வருவது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக பாணியும் பரிசீலனை
ஒருவேளை, மதுபான லாபி மற்றும், பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பு வலுத்தால், கர்நாடக மாதிரியில் மதுபான கொள்கை கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது. கர்நாடகாவில், 20 சதவீத கடைகளை அரசு நடத்தும் நிலையில், மற்றவற்றை தனியாரிடம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.