வாழ்ந்தா அனில் அம்பானி மாதிரி வாழ வேண்டும்.. அவரது கனவுகளைப் பாருங்களேன்!
மும்பை: அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குரூப் இதுவரை ஒரு ராணுவ ஹெலிகாப்டரையும் தயாரித்ததில்லை. நீர்மூழ்கிக் கப்பலைக் கட்டியதில்லை. ஏன் ஏவுகணையை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பது குறித்த ஏபிசிடி கூட தெரியாது. ஆனால் இதையெல்லாம் அடுத்தடுத்து செய்யப் போகிறது ரிலையன்ஸ் குழுமம்.
இந்தியாவின் பாதுகாப்புக்குத் தேவையான நீர்மூழ்கிக் கப்பல்கள், ராணுவ ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகளைத் தயாரிக்க வேண்டும் என்பதுதான் அனில் அம்பானி குழுமத்தின் தற்போதைய கனவுத் திட்டமாகும். அந்த நிறுவனம் தற்போது ரூ. 84,000 கோடி அளவிலான பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்களுக்கான ஏலத்தில் நுழைந்துள்ளது என்பது முக்கியமானது.
முதல் கட்டமாக கடற்படைக்குத் தேவையானதை செய்து தரும் ஒப்பந்தங்களை ரிலையன்ஸ் நிறுவனம் கையில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்புத்துறையில் ரிலையன்ஸ்
தனது ரிலையன்ஸ் நிறுவனத்தை பாதுகாப்புத்துறையில் மிகப் பெரிய முன்னோடியாக மாற்றும் நோக்கத்தை கையில் எடுத்துள்ளார் அனில் அம்பானி. அவர் எடுக்கும் ஒப்பந்தத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினால் மட்டுமே அனில் அம்பானியின் திட்டம் முழுமையாக நனவாகும் என்பதால் இது அனைவரிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாய்ப்புகளைப் பார்க்கிறோம்
இருப்பினும் எந்த வகையான பாதுகாப்புத்துறை திட்டத்தையும் இதுவரை அனில் அம்பானியின் நிறுவனம் செயல்படுத்தியதில்லை என்பது அதற்கு எதிராக அமைந்துள்ளது. அதை அனில் அம்பானி தெளிவாகவே உணர்ந்துள்ளார். இருப்பினும் தனது நிறுவனத்தின் லட்சியம் உயரியது. அதை நிறைவேற்றக் கூடிய வாய்ப்புகளை நாங்கள் பார்த்து வருகிறோம். அனுபவம் இல்லை என்பது அதற்கு இடையூறாக இருக்காது என்று அவர் நம்பிக்கையுடன் கூறுகிறார்.
நம்பிக்கை தரும் மேக் இன் இந்தியா
கடந்த மார்ச் மாதம் மேக் இன் இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது, பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்களை மேற்கொள்ள விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து அதை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவித்தார். மேலும் தொழில்நுட்ப பரிமாற்றம், தயாரிப்புகளில் சிலவற்றை இந்தியாவுக்கு மாற்றுவது ஆகியவற்றையும் மோடி தனது மேக் இன் இந்தியா திட்டத்தில் அறிவித்தார். இதுதான் அனில் அம்பானி நிறுவனத்திற்கு நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது.
பத்து ஆண்டுகளில்
அடுத்த பத்து ஆண்டுகளில் பாதுகாப்புத்துறையில் 250 பில்லியன் டாலர் அளவிலான ஒப்பந்தங்களை பல்வேறு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அளிக்கவுள்ளது. அதில் ஒரு கணிசமான பங்களை எங்களால் பெற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் ரிலையன்ஸ் பாதுகாப்பு நிறுவன தலைமை செயலதிகாரி ஆர்.கே.திங்கரா. ஆனால் பாதுகாப்புத்துறை தளவாடத் தயாரிப்பில் எப்படி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் வெற்றி பெற முடியும் என பல பன்னாட்டு நிறுவனங்கள் சந்தேகம் கிளப்பியுள்ளன. இருப்பினும் அதை ரிலையன்ஸ் கண்டு கொள்ளவில்லை.
கடந்த ஆண்டு முதல்
கடந்த ஆண்டுதான் பாதுகாப்புத்துறையில் காலெடுத்து வைத்தார் அனில் அம்பானி. கடந்த ஆண்டு அவரது ரிலையன்ஸ் நிறுவனம், குஜராத்தில் உள்ள போர்க் கப்பல்கள் மற்றும் மின் உற்பத்தித் தளவாடப் பொருட்கள் நிறுவனமான பிப்பவாவ் பாதுகாப்பு மற்றும் ஆப்ஷோர் என்ஜீனியரிங் நிறுவனத்தை ரூ. 2000 கோடிக்கை கையகப்படுத்தியது. அதிலிருந்துதான் அனில் அம்பானியின் பாதுகாப்புத்துறை அறிமுகம் தொடங்கியது.
ரிலையன்ஸ் டிபன்ஸ்
தற்போது இந்த நிறுவனம் ரிலையன்ஸ் டிபன்ஸ் மற்றும் என்ஜீனியரிங் லிமிட்டெட் என பெயர் மாற்றப்பட்டது. அதன் பிறகு கப்பல் கட்டும் தளம் மற்றும் விமானம் கட்டும் தளம் அமைப்பதற்காக பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை அனில் அம்பானி நிறுவனண் வாங்கியுள்ளது.
இஸ்ரேலின் ரபேல்
மேலும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களுடன் 6க்கும் மேற்பட்ட கூட்டு வணிக ஒப்பந்தங்களையும் ரிலையன்ஸ் டிபன்ஸ் மேற்கொண்டுள்ளது. அதில் முக்கியமான நிறுவனம் இஸ்ரேலின் ரபேல் அட்வான்ஸ்ட் டிபன்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனம். இந்திய அரசின் பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்களை ரிலையன்ஸ் டிபன்ஸ் மற்றும் ரபேல் ஆகியவை கூட்டாக ஏலத்தில் எடுக்கும். இந்த நிறுவனங்களுக்கு இந்திய அரசின் விமானப்படை தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும்போது அதில் சில முக்கிய தயாரிப்புகளை ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் இந்தியாவில் மேற்கொள்ளும்.
அம்பானி அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல்
அனில் அம்பானியிடம் நிறைய கனவுகள் மட்டுமல்லாமல் திட்டங்களும் உள்ளனவாம். அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தியாவிலேயே முழுமையாக தனது நிறுவனத்தின் மூலமாக தயாரிப்பது அதில் ஒன்றாம்.