டெல்லிக்கு வந்த எடப்பாடிக்கு எதிராக பீட்டா கும்பல் திடீர் ஆர்ப்பாட்டம்!
டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அறைக்கு முன் பீட்டா அமைப்பினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் சென்றுள்ள எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து விலங்குகள் நல அமைப்பான பீட்டா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டு நடத்துவதால் விலங்குகள் துன்புறுத்துவதால் அதற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றத்தில் பீட்டா அமைப்பினர் வழக்கு பதிவு செய்தனர். எனினும் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு கோரி மாபெரும் புரட்சி வெடித்தது.
ஆங்காங்கே லட்சக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அப்போது முதல்வராக இருந்த பன்னீர் செல்வம் பிரதமரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்ததோடு, ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டத்தையும் பிறப்பித்தார்.
இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதற்கு பீட்டா அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. அந்த பரபரப்புகள் அப்போது அடங்கிவிட்டது. இந்நிலையில் வறட்சி நிவாரணம் உள்ளிட்ட தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து கோரிக்கை வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி வந்தார்.
இன்று பிரதமரை சந்தித்து கோரிக்கைகளை மனுக்களை அளித்தார். இதைத் தொடர்ந்து அவர் தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளார். அவர் தங்கியுள்ள அறைக்கு முன்பு திடீரென கூடிய பீட்டா கும்பலைச் சேர்ந்தவர்கள், ஜல்லிக்கட்டு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.